உலகம்

கடலில் திறந்துவிடப்பட்ட புகுஷிமா அணுஉலை கழிவு நீர்.. பேராபத்தை உண்டாக்குமா ஜப்பான் அரசின் முடிவு ?

ஜப்பான் அருகே பசிபிக் பெருங்கடலில் கடந்த 2011-ம் ஆண்டு 8.9 என்ற அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக எழுந்த பெரிய அளவு சுனாமி பேரலைகள் ஜப்பானை தாக்கியது. இந்த இயற்கை சீற்றத்தில் 19,747 பேர் பலியாகினர் என அந்நாட்டு அரசு தெரிவித்தது.

இந்த சுனாமி அலைகள் ஜப்பானின் புகுஷிமாவில் அமைக்கப்பட்டிருந்த அணு உலையையும் தாக்கியது. இதில், அணு உலைக்கு தண்ணீர் அனுப்பும் மோட்டார்கள் சேதம் அடைந்ததால், அணு உலையை குளிர்விக்கும் முறை செயலிழந்தது. இதன் காரணமாக அங்கிருந்த மூன்று ரியாக்டர்களில் கசிவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் இருந்த 1, 54,000 பேர் அவசரமாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அணுக்கதிர்வீச்சால் பாதிக்கப்பட்ட நீர் அங்குள்ள கடலில் கலந்தது. மேலும், இதனால் நிலத்தடி நீரும் மாசுபட்டது பின்னர் கண்டறியப்பட்டது. மேலும், அணு கழிவுகள் அகற்றப்பட்ட கழிவு நீரை பசிபிக் கடலில் திறந்துவிடவும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி 1.17 மில்லியன் கன மீட்டர் அளவிலான நீர் படிப்படியாக வெளியேற்றப்படும் என ஜப்பான் அறிவித்துள்ளது.

இந்த அணுஉலை கழிவு நீரை சுத்திகரித்த பின்னரே திறக்கப்படும் என ஜப்பான் அரசு கூறினாலும், அந்த நீரில் இன்னும் கதிரியக்கம் எஞ்சியிருக்கும் என்ற அச்சம் நிலவுவதால் ஜப்பான் அரசின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த நீரை திறந்துவிடுவதால் பசிபிக் கடலில் இருக்கும் மீன்கள் பாதிக்கப்படும் என்றும், இதனால் வெளிநாடுகளுக்கு மீன்கள் ஏற்றுமதி நின்றுபோகும் என்றும் ஜப்பான் மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும், ஜப்பான் அரசின் இந்த முடிவுக்கு சீனாவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 2011-ம் ஆண்டு புகுஷிமா அணுஉலை விபத்து நேரிட்டதுமே, அந்த பிராந்தியத்தில் பிடிக்கப்படும் மீன்களை இறக்குமதி செய்ய ஐரோப்பிய ஒன்றியம், சீனா, தென் கொரியா ஆகியவை தடை விதித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே அணுஉலை கழிவு நீர் அதற்காக அமைக்கப்பட்டிருக்கும் சுரங்கபாதை வழியே கடலில் திறந்துவிடப்பட்டதாக ஜப்பானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Also Read: ஹரியானா : நின்றுபோன யாத்திரையை மீண்டும் தொடரவுள்ளதாக இந்துத்துவ அமைப்புகள் அறிவிப்பு.. தொடரும் பதற்றம் !