உலகம்

ஊழல் வழக்கில் 3 ஆண்டு சிறை.. விரைவில் வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் நிற்கமுடியாத நிலையில் இம்ரான் கான் !

பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான் கான் மீது, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்கட்சிகள் கொண்டு வந்தன. பல்வேறு எதிர்புகளுக்கு மத்தியில் அந்த தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இம்ரான் கான் பதவி விலகி எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியமைத்தன. தற்போது பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியை சேர்ந்த ஷெபாஸ் ஷெரீப் பாகிஸ்தானில் பிரதமராக இருந்து வருகிறார். அவரின் அரசுக்கு பெரிய கட்சிகளில் ஒன்றான பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆதரவு அளித்து வருகிறது.

இம்ரான் கானுக்கு எதிராகவும் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு பல குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறது. அதில் 2018 முதல் 2022 ஆம் ஆண்டு வரை இம்ரான் கான் பிரதமராக இருந்தபோது அவர் வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொண்டபோது வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகள், விலையுயர்ந்த பொருட்களை விற்று கிடைத்த பணத்தை மோசடி செய்ததாக ஒரு வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கை இஸ்லாமாபாத் விசாரணை நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்நிலையில் அந்த வழக்கில் இம்ரான் கான் குற்றவாளி என்று உறுதி செய்த நீதிமன்றம் அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் வழங்கியுள்ளது.அதனைத் தொடர்ந்து அவர் உடனடியாக கைது செய்யப்பட்டார். இந்த தண்டனை காரணமாக அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எவ்வித தேர்தலிலும் போட்டியிட இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே நாடாளுமன்றத்தின் தற்போதைய பதவிக்காலம் வரும் 12ம் தேதியுடன் நிறைவடையவுள்ள நிலையில் வரும் 9ம் தேதி பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக அந்நாட்டு பிரதமர் ஷபாஸ் ஷெரிப் அறிவித்துளார். பாகிஸ்தானில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட 90 நாட்களுக்குள் மீண்டும் பொதுத் தேர்தல் நடத்தப்படும் நிலையில் தண்டனை காரணமாக இம்ரான் கானால் அந்த தேர்தலில் போட்டியிடமுடியாத நிலை எழுந்துள்ளது.

Also Read: 50-க்கும் மேற்பட்டோரை பலி வாங்கிய டெல்லி கலவரம்.. வன்முறைக்கு காரணமானவருக்கு பாஜகவில் துணை தலைவர் பதவி !