உலகம்

சீன போலிஸை Photo எடுத்த தைவான் நபருக்கு சிறை: 4 ஆண்டுகளுக்கு பிறகு விடுவிப்பு.. காரணமும் பின்னணியும் ?

பொதுவாகவே சீனா தனது எல்லைகள் பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்கும். பல்வேறு அரசியல் காரணமாக சீன அரசு மிகவும் கடினமாக இருக்கும். தங்களை உளவு பார்ப்பதாக கூறி இதுவரை பலபேர் சிறைவைக்கப்பட்டுள்ளனர். எனவே சீனாவுக்கு வெளிநாடு சுற்றுலா பயணிகள் சென்றால் மிகவும் கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்.

அப்படி தைவானை சேர்ந்த நபர் ஒருவர் கவனக்குறைவாக இருந்ததால் சிக்கலில் சிக்கியுள்ளார். தைவானை சேர்ந்தவர் லீ மெங்-சு (Lee Meng-chu). தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இவர், அடிக்கடி சீனாவுக்கு செல்வது வழக்கம். அந்த வகையில் கடந்த 2019-ம் ஆண்டு, சுமார் 4 ஆண்டுகளுக்கு முன்னர் சீனாவுக்கு வந்துள்ளார்.

அப்போது சீனாவின் ஹாங்காங்கில் பல்வேறு விஷயங்கள் காரணமாக போராட்டம் நடந்துள்ளது. எனவே இவரால் மீண்டும் தனது தாய் நாட்டுக்கு திரும்ப முடியாமல் இருந்ததால், சில காலம் அங்கேயே இருக்க வேண்டிய சூழல் இருந்துள்ளது. இதனிடையே போராட்டத்தை காவல்துறையினர் கட்டுக்குள் கொண்டு வர பல முயற்சிகளை மேற்கொண்டனர்.

அதனை தனது ஹோட்டல் அறையில் இருந்தவாறே, தனது கேமரா மூலம் புகைப்படம் எடுத்துள்ளார். இதையடுத்து போராட்டம் கட்டுக்குள் வந்ததையடுத்து தனது நண்பரை சந்திக்க ஷென்சென் (Shenzhen) என்ற நகருக்கு சென்றுள்ளார். அப்போது அவரது உடமைகளை விமான அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அதன்படி அவரது கேமராக்களையும் ஆய்வு செய்தனர்.

அப்போது அதில் சீன போலீசின் புகைப்படம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இதுகுறித்து விசாரிக்கையில், தனது விளக்கத்தை கொடுத்தார். இருப்பினும் அதனை அவர்கள் ஏற்றுக்கொள்ளாமல், தைவானை சேர்ந்த லீ மெங்-சு, சீனாவை உளவு பார்ப்பதாக கருதி அவரை சிறை பிடித்தனர். ஆரம்பத்தில் அவர் தனது ஹோட்டல் அறையில் சுமார் 72 நாட்களாக சிறை வைக்கப்பட்டார்.

இதைத்தொடர்ந்து அவர் ஒரு முகாமுக்கு மாற்றப்பட்டார். அங்கே அவரது செயல்பாடுகள் விசாரணை ஆகியவற்றின் அடிப்படையில் கடந்த 2021-ம் ஆண்டு விடுவிக்கப்பட்டார். இருப்பினும் அவர் சீனாவில் இருந்து வெளியேற தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில் தற்போது அவர் முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் ஜப்பானில் இருக்கிறார்.

விரைவில் தைவானுக்குத் திரும்ப திட்டமிட்டுள்ளார். மேலும் இந்த பிரச்னையில் இருந்து தான் முழுமையாக விடுபட வேண்டும் என்றும், தாய் நாட்டுக்கு இவ்வாறு செய்தது வருந்தத்தக்கது என்றும், வருத்தம் தெரிவித்ததோடு இந்த நிகழ்வுக்கு மன்னிப்பும் கேட்டார்.