உலகம்

சமூக வலைதளமா? ஆபாச தளமா ? .. ட்விட்டருக்கு தடை விதித்த இந்தோனேசியா ? சிக்கலில் எலான் மஸ்க் !

உலகின் பிரபலமான சமூக வலைத்தளமான ட்விட்டரை உலகின் முதல் பணக்காரரான எலான் மஸ்க் கைப்பற்றி ட்விட்டரில் தலைமை நிதி அதிகாரி நெட் சேகல், CEO பராக் அகர்வால் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலரையும் அடுத்தடுத்து பணி நீக்கம் செய்தார். மேலும் கிட்டத்தட்ட 50 % ட்விட்டர் ஊழியர்களுக்கு பணிநீக்க செய்தி அனுப்பப்பட்டது. எலான் மஸ்க்கின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனத்தை தெரிவித்தனர்.

இதனிடையே ட்விட்டரை கைப்பற்றிய கையோடு இனி ட்விட்டரில் 'ப்ளூடிக்' பெற மாதம் இந்திய மதிப்பில் ரூ.719 சந்தா கட்ட வேண்டும் என எலான் மஸ்க் அறிவித்தார். இதுதவிர ப்ளூடிக் முறையிலும் எலான் மஸ்க் மாற்றத்தை கொண்டுவந்தார். அதன்படி தனிநபர், தனியார் அமைப்புகளுக்கு ப்ளூ டிக், அரசியல் பிரமுகர்கள், அரசு சார்ந்த அமைப்புகளுக்கு சாம்பல் நிற டிக், தொழில் சார்ந்த நிறுவனங்களின் கணக்குகளுக்கு மஞ்சள் டிக் என அறிமுகப்படுத்தியுள்ளார்.

அதன் பின்னர் தற்போது மற்றொரு மாற்றமாக ட்விட்டரில் இனி வெரிபைட் பயனர்கள் ஒரு நாளைக்கு 10,000 ட்விட்களை மட்டுமே பார்க்க முடியும் என்று எலான் மஸ்க் அறிவித்துள்ளார். இதுபோன்ற காரணங்களால் தற்போது ட்விட்டரை விட்டு பலர் வெளியேறி வருவதாக கூறப்பட்டது. மேலும், ட்விட்டரின் நீண்ட நாள் போட்டியாளரான மெட்டா நிறுவனம் ட்விட்டருக்குப் போட்டியாக Threads என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தி வரவேற்பை பெற்றதும் கவனிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன்னர் எலான் மஸ்க் ட்விட்டரின் அடையாளமாக பல ஆண்டுகளாக இருந்த நீலக்குருவியை மாற்றி புதிய லோகோவாக X என்ற ஆங்கில எழுத்தை வைத்துள்ளார். மேலும் ட்விட்டர் டொமைனையும் x.com என மாற்றியுள்ளார்.

இந்த நிலையில், ட்விட்டரின் இந்த புதிய டொமைனுக்கு இந்தோனேசிய அரசு தடை விதித்துள்ளது. ட்விட்டரின் x.com என்கிற டொமைனை, ஆபாச வலைத்தளங்கள் பயன்படுத்தி வருவதால், தற்போது மறுபெயரிடப்பட்டுள்ள x.com க்கும், இணையத்தில் உள்ள ஆபாச வலைத்தளங்களுக்கும் வேறுபாடுகள் தெரிவதில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இதன் காரணமாக அந்த டொமைனுக்கு தடை விதித்து இந்தோனேசிய அரசின் தகவல் தொடர்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக அந்த நாட்டில் இருந்து யாரும் ட்விட்டரை அணுக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Also Read: சென்னை to யாழ்ப்பாணம்.. விமானத்தில் திடீரென மயங்கி விழுந்த பயணி: அடுத்து நடந்தது என்ன?