உலகம்
இனி X தான் அடையாளம்.. நீலக்குருவியை நிரந்தரமாக பறக்கவிட்ட எலான் மஸ்க்.. விரைவில் வரும் அடுத்த மாற்றம் !
உலகின் பிரபலமான சமூக வலைத்தளமான ட்விட்டரை உலகின் முதல் பணக்காரரான எலான் மஸ்க் கைப்பற்றி ட்விட்டரில் தலைமை நிதி அதிகாரி நெட் சேகல், CEO பராக் அகர்வால் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலரையும் அடுத்தடுத்து பணி நீக்கம் செய்தார். மேலும் கிட்டத்தட்ட 50 % ட்விட்டர் ஊழியர்களுக்கு பணிநீக்க செய்தி அனுப்பப்பட்டது. எலான் மஸ்க்கின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனத்தை தெரிவித்தனர்.
இதனிடையே ட்விட்டரை கைப்பற்றிய கையோடு இனி ட்விட்டரில் 'ப்ளூடிக்' பெற மாதம் இந்திய மதிப்பில் ரூ.719 சந்தா கட்ட வேண்டும் என எலான் மஸ்க் அறிவித்தார். இதுதவிர ப்ளூடிக் முறையிலும் எலான் மஸ்க் மாற்றத்தை கொண்டுவந்தார். அதன்படி தனிநபர், தனியார் அமைப்புகளுக்கு ப்ளூ டிக், அரசியல் பிரமுகர்கள், அரசு சார்ந்த அமைப்புகளுக்கு சாம்பல் நிற டிக், தொழில் சார்ந்த நிறுவனங்களின் கணக்குகளுக்கு மஞ்சள் டிக் என அறிமுகப்படுத்தியுள்ளார்.
அதன் பின்னர் தற்போது மற்றொரு மாற்றமாக ட்விட்டரில் இனி வெரிபைட் பயனர்கள் ஒரு நாளைக்கு 10,000 ட்விட்களை மட்டுமே பார்க்க முடியும் என்று எலான் மஸ்க் அறிவித்துள்ளார். இதுபோன்ற காரணங்களால் தற்போது ட்விட்டரை விட்டு பலர் வெளியேறி வருவதாக கூறப்பட்டது. மேலும், ட்விட்டரின் நீண்ட நாள் போட்டியாளரான மெட்டா நிறுவனம் ட்விட்டருக்குப் போட்டியாக Threads என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தி வரவேற்பை பெற்றதும் கவனிக்கப்பட்டது.
இந்த நிலையில், எலான் மஸ்க் தற்போது ட்விட்டரின் லோகோவை மாற்றியுள்ளார். ட்விட்டரின் அடையாளமாக பல ஆண்டுகளாக நீலக்குருவி இருந்த நிலையில், தற்போது அதனை X என்ற ஆங்கில எழுத்துக்கு எலான் மஸ்க் மாற்றியுள்ளார். மேலும், விரைவில் ட்விட்டரின் பெயரும் மாற்றப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
எலான் மஸ்க்கின் இதுபோன்ற நடவடிக்கை காரணமாக ட்விட்டரின் வருவாய் பாதியாக குறைந்ததாக எலான் மஸ்க்கே ஒப்புக்கொண்ட நிலையில், அவரின் இதுபோன்ற நடவடிக்கை மேலும் ட்விட்டரை பாதிக்கும் என பல்வேறு தரப்பினர் தொடர்ந்து கூறி வருகின்றனர். முன்னதாக சிறிது நாள் தனது வளர்ப்பு நாயின் புகைப்படத்தை எலான் மஸ்க் ட்விட்டர் லோகோவாக வைத்து பின்னர் மாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
மாநிலம் முழுவதும் நேரடி உரங்களுக்கு அதிக தேவை நிலவுகிறது! : பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
-
பவள விழா கண்ட இயக்கம் தி.மு.க.வின் முப்பெரும் விழா! : நாளை (செப்.17) கரூரில் கருத்தியல் கோலாகலம்!
-
சென்னையின் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்... காவல்துறை அறிவிப்பு... முழு விவரம் உள்ளே !
-
சென்னையில் நாளை 12 வார்டுகளில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் : இடங்கள் விவரங்களை வெளியிட்டது மாநகராட்சி !
-
ஆசியாவிலேயே முதல்முறை... சென்னையில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு AI கற்றுக்கொடுக்க சிறப்புத் திட்டம் !