உலகம்

ட்விட்டரில் அடுத்த மாற்றம்.. இனி 10,000 ட்விட்களை மட்டுமே பார்க்க முடியும்.. அறிவிப்பின் பின்னணி என்ன ?

உலகின் பிரபலமான சமூக வலைத்தளமான ட்விட்டரை உலகின் முதல் பணக்காரரான எலான் மஸ்க் முழுமையாகக் கைப்பற்றப் போவதாகக் கூறப்பட்டு வந்த நிலையில், பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே ஒருவழியாக ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளராக எலான் மஸ்க் ஆகியுள்ளார்.

ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளரான கையோடு ட்விட்டரில் தலைமை நிதி அதிகாரி நெட் சேகல், CEO பராக் அகர்வால் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலரையும் அடுத்தடுத்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.மேலும் கிட்டத்தட்ட 50 % ட்விட்டர் ஊழியர்களுக்கு பணிநீக்க செய்தி அனுப்பப்பட்டது. எலான் மஸ்க்கின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனத்தை தெரிவித்தனர்.

இதனிடையே ட்விட்டரை கைப்பற்றிய கையோடு இனி ட்விட்டரில் 'ப்ளூடிக்' பெற மாதம் இந்திய மதிப்பில் ரூ.719 சந்தா கட்ட வேண்டும் என எலான் மஸ்க் அறிவித்தார். அவரின் இந்த அறிவிப்புக்கும் எதிர்ப்பு எழுந்தது. ஆனாலும் தனது முடிவில் எலான் மஸ்க் பின்வாங்காமல் இருந்தார். தற்போதைய நிலையில், இந்த கட்டணவிதிப்பு அமல் படுத்தப்பட்டுள்ள நிலையில், பலரும் அதற்கான தொகையை செலுத்திவருகின்றனர்.

இதுதவிர ப்ளூடிக் முறையிலும் எலான் மஸ்க் மாற்றத்தை கொண்டுவந்தார். அதன்படி தனிநபர், தனியார் அமைப்புகளுக்கு ப்ளூ டிக், அரசியல் பிரமுகர்கள், அரசு சார்ந்த அமைப்புகளுக்கு சாம்பல் நிற டிக், தொழில் சார்ந்த நிறுவனங்களின் கணக்குகளுக்கு மஞ்சள் டிக் என அறிமுகப்படுத்தியுள்ளார்.

இந்த நிலையில், தற்போது மற்றொரு மாற்றமாக ட்விட்டரில் இனி வெரிபைட் பயனர்கள் ஒரு நாளைக்கு 10,000 ட்விட்களை மட்டுமே பார்க்க முடியும் என்று எலான் மஸ்க் அறிவித்துள்ளார். மேலும், வெரிபை செய்யாத பயனர்கள் ஒரு நாளுக்கு 1000 ட்விட்களும், புதிதாக இணையும் புதிய யூசர்கள் 500 ட்விட்ளை மட்டுமே பார்க்க முடியும் வகையிலும் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ட்விட்டர் நிறுவனத்தில் இருந்து ஏகப்பட்ட அளவிற்கு டேட்டாகள் வேறு தளத்துக்கு எடுக்கப்படுவதாகவும், இதனை தடுக்கும் விதமாகவே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாகவும் ட்விட்டர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது போன்ற நடவடிக்கை இந்த சம்பவங்களை குறைக்கும் என்றும், இதனால் பயனர்கள் பாதிக்கப்படமாட்டார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

Also Read: வரலாற்றில் முதல்முறை.. உலகக்கோப்பையிலிருந்து வெளியேறியது மேற்கிந்திய தீவுகள் அணி.. ரசிகர்கள் அதிர்ச்சி!