உலகம்

பாகிஸ்தானில் மோசமான நிலைக்கு சென்ற உணவு பஞ்சம்.. இலவச உணவை வாங்க சென்ற 12 பேர் நெரிசலில் சிக்கி பலி !

கொரோனா பெரும் தொற்று காரணமாக உலக அளவில் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதில் இருந்து உலகம் மீண்டு வந்த நிலையில், உக்ரைன் -ரஷ்யா போர் ஆரம்பமாகி மீண்டும் உலகளாவிய பொருளாதார நெருக்கடியை அதிகரித்தது.

அதிலும், பாகிஸ்தான் போன்ற நாடுகள் இந்த பொருளாதார நெருக்கடியில் அதிகமாக பாதிக்கப்பட்டது. அந்த நாட்டில் அடிப்படை உணவுக்கே தற்போது பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் கோதுமைக்காக பொதுமக்கள் ஒருவரை ஒருவரை அடித்துக்கொள்ளும் மோசமான நிலை ஏற்பட்டுள்ளது.

நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு குறைத்த நிலையில் கிட்டத்தட்ட இலங்கைக்கு நேர்ந்த நிலையைதான் தற்போது பாகிஸ்தான் சந்தித்து வருகிறது. போதிய வரி வருவாய் இல்லாத நிலையில், மக்களின் அடிப்படை தேவைகளை பாகிஸ்தான் அரசால் நிறைவேற்றமுடியவில்லை.

பாகிஸ்தானின் தற்போதைய அந்நிய செலாவணி கையிருப்பு கிட்டத்தட்ட காலியானதாக கூறப்பட்ட நிலையில், அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்தால் ஏற்படும் முதல் பாதிப்பான எரிபொருள் பற்றாக்குறையை பாகிஸ்தான் சந்தித்து வருகிறது.

இதன் காரணமாக வெகுவிரைவில் அந்த நாடு திவாலாகும் என கூறப்பட்ட நிலையில், பாகிஸ்தான் ஏற்கனவே திவாலாகி விட்டதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் க்வாஜா ஆசிப் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதவிர அங்கு உணவு பொருளுக்காக பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்கவேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், கராச்சி மாகாணம் சிந்து தொழிற்பேட்டை பகுதியில் தொண்டு நிறுவனம் சார்பில் இலவச ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டன. இது குறித்த தகவல் அறிந்ததும் அதை வாங்க நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஒரே நேரத்தில் அந்த பகுதியில் குவிந்ததால் பெரிய அளவில் அங்கு நேரிசல் ஏற்பட்டது. மக்கள் குவிந்ததால் நெரிசல் ஏற்பட்டது.

பொதுமக்கள் உணவை வாங்க முண்டியடித்து சென்றதால் நெரிசரில் மூச்சு திணறி பெண்கள், குழந்தைகள் என 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலருக்கு காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாமல் இலவச ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்ததாக தொண்டு நிறுவனத்தின் பேரில் வழக்கு பதிவு செய்த போலிஸார் அதன் நிர்வாகிகளை கைது செய்தனர். இந்த சம்பவம் பாகிஸ்தானில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: செயற்கை நுண்ணறிவான ChatGPT-க்கு தடை.. இத்தாலி அரசு அறிவிப்பு.. தடைக்கான காரணம் என்ன தெரியுமா ?