உலகம்

செயற்கை நுண்ணறிவான ChatGPT-க்கு தடை.. இத்தாலி அரசு அறிவிப்பு.. தடைக்கான காரணம் என்ன தெரியுமா ?

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதலீடோடு OPEN AI என்ற மென்பொருள் நிறுவனம் கடந்த ஆண்டு நவம்பரில் Chat GPT-யின் செயற்கை நுண்ணறிவு மென்பொருளை அறிமுகம் செய்தது. அதில் இருந்து இணையஉலகம் Chat GPT-யை பற்றியே தொடர்ந்து பேசி வருகிறது.

Chat GPT மென்பொருள் செயற்கை ரோபோ போல செயல்படும் ஒரு அமைப்பாகும். இதனால் நமது கேள்விகளுக்கு பதிலளிக்க முடியும், நம்முடன் உரையாட முடியும், இன்னும் சொல்ல வேண்டும் என்றால் நமது தேவைகளுக்கு ஏற்ப அனைத்து பதில்களையும் Chat GPT-யால் தரமுடியும். அதிலும் கல்வி நிலைய பயன்பாடுகளில் கடிதம் முதல் கட்டுரை வரை அனைத்தையும் இதனால் செய்யமுடியும்.

சுமார் 100 மொழிகளில் Chat GPT மென்பொருள் தற்போது கிடைக்கிறது என்றாலும் ஆங்கிலம் தவிர பிற மொழிகளில் இதன் திறன் சிறப்பாக இல்லை என்றும் கூறப்படுகிறது. அதேநேரம் Chat GPT மென்பொருளை தனது தேடுதல் பொறியான BING-ல் இணைத்து லாபம் ஈட்ட மைக்ரோசாப்ட் முயற்சித்து அதற்கான செயலில் இறங்கியுள்ளது. இந்த தொழில்நுட்பம் வந்தபிறகு இது தேடுதல் வலைத்தளமாக உலகளவில் ஆதிக்கம் செல்லும் கூகுள் நிறுவனத்துக்கு பெரும் சவாலாக உருவெடுக்கும் என கணிக்கப்பட்டது.

இந்த நிலையில், பயனர்களின் உரையாடல்கள் உள்ளிட்ட தரவு மீறலில் ஈடுபட்டதால் Chat GPT மென்பொருளை இத்தாலி அரசு தடைசெய்துள்ளது. இது குறித்த அறிவிப்புல் சாட்ஜிபிடி பிளஸை பயன்படுத்தும் 1.2% பயனர்களின் தனிப்பட்ட தரவுகள் வேறொரு பயனருக்கு வெளிப்படுத்தப்பட்டு இருக்கலாம் என்றும், இது இத்தாலியில் சட்டவிரோதமானது என்பதால் தடை செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், Chat GPT பயனர்களின் ப்ரைவஸிக்கு மதிப்பும் மரியாதையும் கொடுக்கும் வரை இந்த தடை நீடிக்கும் என்றும் இதற்காக 20 நாட்கள் கெடு விதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு Chat GPT பயனர்களின் வயதை சரிபார்ப்பதற்கான எந்த அமைப்பும் இல்லை என்றும், இதனால் இளம் வயதினர் அவர்களின் வயது மற்றும் விழிப்புணர்வுக்கு முற்றிலும் பொருத்தமற்ற பதில்களை பெறும் சூழ்நிலை உருவாகியுள்ளதாகவும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.