உலகம்

"செயற்கை நுண்ணறிவான Chat GPT-யை கண்டு நாங்களும் பயப்படுகிறோம்" - செயலியின் கண்டுபிடிப்பாளர் ஒப்புதல் !

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதலீடோடு OPEN AI என்ற மென்பொருள் நிறுவனம் கடந்த ஆண்டு நவம்பரில் Chat GPT-யின் செயற்கை நுண்ணறிவு மென்பொருளை அறிமுகம் செய்தது. அதில் இருந்து இணையஉலகம் Chat GPT-யை பற்றியே தொடர்ந்து பேசி வருகிறது.

Chat GPT மென்பொருள் செயற்கை ரோபோ போல செயல்படும் ஒரு அமைப்பாகும். இதனால் நமது கேள்விகளுக்கு பதிலளிக்க முடியும், நம்முடன் உரையாட முடியும், இன்னும் சொல்ல வேண்டும் என்றால் நமது தேவைகளுக்கு ஏற்ப அனைத்து பதில்களையும் Chat GPT-யால் தரமுடியும். அதிலும் கல்வி நிலைய பயன்பாடுகளில் கடிதம் முதல் கட்டுரை வரை அனைத்தையும் இதனால் செய்யமுடியும்.

சுமார் 100 மொழிகளில் Chat GPT மென்பொருள் தற்போது கிடைக்கிறது என்றாலும் ஆங்கிலம் தவிர பிற மொழிகளில் இதன் திறன் சிறப்பாக இல்லை என்றும் கூறப்படுகிறது. அதேநேரம் Chat GPT மென்பொருளை தனது தேடுதல் பொறியான BING-ல் இணைத்து லாபம் ஈட்ட மைக்ரோசாப்ட் முயற்சித்து அதற்கான செயலில் இறங்கியுள்ளது. இந்த தொழில்நுட்பம் வந்தபிறகு இது தேடுதல் வலைத்தளமாக உலகளவில் ஆதிக்கம் செல்லும் கூகுள் நிறுவனத்துக்கு பெரும் சவாலாக உருவெடுக்கும் என கணிக்கப்பட்டது.

இந்த நிலையில், Chat GPTயை கண்டு நாங்களும் பயப்படுகிறோம் என்றும், இதன் காரணமாக ஏராளமானவர்கள் வேலை பறிபோகும் என்றும், OPEN AI நிறுவனத்தின் சீ.இ.ஓ சாம் ஆல்ட்மேன் கூறியுள்ளார். தனியார் நிறுவனத்தின் நேர்காணலில் இதுகுறித்து பேசிய அவர், "Chat GPT மக்களின் வாழ்க்கை முறையை மாற்றும் என கருதுகிறேன். ஆனால், மனித இனத்தை அழிக்கும் என்ற புனைக்கதையை எல்லாம் நம்பவேண்டாம்.

இது போன்ற செயற்கை நுண்ணறிவு மாடல்கள் பெரிய அளவில் தவறான தகவல்களை பரப்புவதற்கு பயன்படுத்தப்படலாம் என்று கொஞ்சம் பயம் இருக்கிறது. இதனால் Chat GPTயை கண்டு நாங்களும் பயப்படுகிறோம் என்பது உண்மைதான். இதன் காரணமாக ஏராளமானவர்கள் வேலை பறிபோகும் வாய்ப்பும் இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. எனவே மோசமான விளைவுகளிலிருந்து மக்களைப் பாதுகாக்க, கட்டுப்பாட்டாளர்களும் சமூகமும் இணைந்து செயல்படுவது மிகவும் முக்கியமானது" என்று கூறியுளளார்.

Also Read: இம்ரான் கான் வீட்டு கதவு புல்டோசர் மூலம் இடிப்பு.. 10 ஆயிரம் போலிஸாரால் அடித்து விரட்டப்பட்ட தொண்டர்கள் !