உலகம்

20 ஆயிரம் பேரை பலிவாங்கிய நிலநடுக்கம்.. வேலைக்காக சென்று உயிரிழந்த இந்தியர்.. நட்சத்திர ஹோட்டலில் சோகம் !

மத்திய தரைக்கடல் பகுதியில் ஐரோப்பாவையும், ஆசியாவையும் இணைக்கும் இடத்தில துருக்கி நாடு அமைந்துள்ளது. அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் இந்த பகுதியில் கடந்த 6-ம் தேதி அந்நாட்டு நேரப்படி அதிகாலை 4.17 மணிக்கு காசியானதெப் எனும் இடத்தில் ரிக்டர் அளவுகோலில் 7.8 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கத்தில் ஏராளமான கட்டிடங்கள் நொடியில் தரைமட்டமான நிலையில், இடிபாடுகளில் ஏராளமான பொதுமக்கள் சிக்கிக்கொண்டனர். அதிகாலை நேரம் என்பதால் ஏராளமானோர் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த நிலையில் இந்த நிலநடுக்கத்தில் சிக்கிக்கொண்டனர்.

பூமிக்கு அடியில் 17.9 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி தற்போது வரை 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி துருக்கி - சிரியா எல்லை அருகே அமைந்துள்ளதால் சிரியா நாட்டிலும் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் லெபனான், சிரியா, ஸைப்ரஸ், இஸ்ரேல் உள்பட்ட நாடுகளில் உணரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து அதே நாளில் இந்திய நேரப்படி மாலை 3.54 அளவில் 7.5 என்ற ரிக்டர் அளவுகோலில் மீண்டும் அங்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தில் இந்தியர் ஒருவரும் உயிரிழந்த சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம் பாரிகார்வால் பகுதியை சேர்ந்த விஜய் குமார்காட் என்பவர் பெங்களூருவைச் சேர்ந்த ஆக்ஸி பிளாண்ட் இந்தியா எனும் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். அப்போது வேலை நிமித்தமான துருக்கி கிழக்கு அனடோலியா மாகாணத்தில் அமைந்திருக்கும் உள்ள மாலத்யாவுக்கு சென்றவர் அங்குள்ள 4 ஸ்டார் நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்துள்ளார்.

அப்போது ஏற்பட்ட நிலநடுக்கத்தில் அவர் மரணமடைந்தது தற்போது தெரியவந்துள்ளது. அவரின் மரணத்தை இந்திய தூதரகமும் உறுதிசெய்துள்ளது. அவரின் உடல் நிலநடுக்கம் ஏற்பட்ட இடிபாடுகளுக்குள் சிக்கிய நிலையில் மீட்கப்பட்டது. அவரின் உடலில் இருந்து டாட்டு மூலம் இறந்தது விஜய்குமார்தான் என்பதை அவரின் குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர். இந்த தகவல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: வேலைக்கு ஆள் தேவை.. “விளம்பரம் கொடுத்தது ஒரு குத்தமா”: 6 லட்சம் அபராதம் விதித்த அதிகரிகள்! -நடந்தது என்ன?