உலகம்

நிலநடுக்கத்தால் பெயர்ந்த 190 கி.மீ பரப்பளவு.. 10 மீட்டர் நகர்ந்த துருக்கி.. வெளிவந்த அதிர்ச்சி தகவல் !

மத்திய தரைக்கடல் பகுதியில் ஐரோப்பாவையும், ஆசியாவையும் இணைக்கும் இடத்தில துருக்கி நாடு அமைந்துள்ளது. அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் இந்த பகுதியில் கடந்த 6-ம் தேதி அந்நாட்டு நேரப்படி அதிகாலை 4.17 மணிக்கு காசியானதெப் எனும் இடத்தில் ரிக்டர் அளவுகோலில் 7.8 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கத்தில் ஏராளமான கட்டிடங்கள் நொடியில் தரைமட்டமான நிலையில், இடிபாடுகளில் ஏராளமான பொதுமக்கள் சிக்கிக்கொண்டனர். அதிகாலை நேரம் என்பதால் ஏராளமானோர் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த நிலையில் இந்த நிலநடுக்கத்தில் சிக்கிக்கொண்டனர்.

பூமிக்கு அடியில் 17.9 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி தற்போது வரை4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி துருக்கி - சிரியா எல்லை அருகே அமைந்துள்ளதால் சிரியா நாட்டிலும் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் லெபனான், சிரியா, ஸைப்ரஸ், இஸ்ரேல் உள்பட்ட நாடுகளில் உணரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து அதே நாளில் இந்திய நேரப்படி மாலை 3.54 அளவில் 7.5 என்ற ரிக்டர் அளவுகோலில் மீண்டும் அங்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். துருக்கியில் இதற்கு முன்னர் 1999 ஆம் ஆண்டு 7.4 என்ற அளவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 17,000 பேர் உயிரிழந்தனர். அதன்பின்னர் 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் 6.8 அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 40 பேர் உயிரிழந்த நிலையில், கடந்த அக்டோபர் மாதம் 7.0 அளவில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 114 பேர் உயிரிழந்தனர்.

இப்படி கடந்த 20 ஆண்டுகளில் ஏற்பட்ட இதுபோன்ற தொடர் நிலநடுக்கங்களுக்கு கண்ட நகர்வே காரணம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். துருக்கி அமைந்திருக்கும் அனடோலியன் தட்டு அரேபியன் தட்டோடு அடிக்கடி மோதிக்கொள்வதால் இது போன்ற நிலநடுக்கங்கள் ஏற்படுவதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். தற்போது ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்துக்கும் இதுவே காரணமாக இருந்துள்ளது. அதோடு வரும்காலங்களிலும் இதுபோன்ற நிலநடுக்கங்கள் நிகழலாம் எனவும் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் தற்போது துருக்கியில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் காரணமாக துருக்கி அமைந்துள்ள பகுதியின் நில அடுக்குகள் 10 மீட்டர் வரை லேசாக தென் மேற்கு திசையில் நகர்ந்து உள்ளதாக இத்தாலி புவியியல் வல்லுனர் கார்லோ டோஃலோனி கூறியுள்ளார். இது தொடர்பான பேசிய அவர், தற்போது நடந்த இந்த வலிமையான நிலநடுக்கம் காரணமாக துருக்கியின் நில அடுக்குகள் 10 மீட்டர் அல்லது அதை விட அதிகமாக நகர்ந்து உள்ளன.

இதேபோல துருக்கியின் அருகில் அமைந்துள்ள சிரியா இதை விட கொஞ்சம் குறைவாக நகர்ந்துள்ளது. தற்போது கிடைத்துள்ள தகவலின் அடிப்படையில் இந்த தகவல் கிடைத்துள்ளது. முழுமையான தகவல் இன்னும் சிறிது நாளில் தெரியவரும். துருக்கியில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் காரணமாக அந்த பகுதியின் 190 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட பகுதிகளில் நிலம் வெடித்து பெயர்ந்துள்ளது. இதில் மொத்த துருக்கியும் பாதிக்கப்பட்டுள்ளது" எனக் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Also Read: பிற்படுத்தப்பட்டோர், தலித், பெண்களை இழிவுபடுத்துகிறது- வடமாநிலங்களில் எரிக்கப்பட்ட துளசிதாசரின் ராமாயணம்!