உலகம்

மீட்டிங் வரச்சொல்லி 3000 பேரை வேலையை விட்டுத் தூக்கிய Goldman Sachs நிறுவனம்: தினம் ஒரு layoffs!

உலகம் முழுவதும் ஐ.டி நிறுவனங்களில் மட்டும் இல்லாமல் மென்பொருள் நிறுவனங்கள், உணவு டெலிவரி நிறுவனங்கள்,மியூசிக் ஸ்ட்ரீம் நிறுவனங்கள் என படிப்படியாக அனைத்து பெரிய முன்னணி நிறுவனங்களிலிருந்தும் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு வருவது தொடர்கதையாக மாறியுள்ளது.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும், ட்விட்டர், ஃபேஸ்புக், மைக்ரோசாப்ட், விப்ரோ, ஸ்விக்கி போன்ற நிறுவனங்களில் இருந்து ஊழியர்கள் வேலையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இப்படிப் பணி நீக்கம் செய்யப்பட்டவர்களில் சரிபாதி பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.

இந்த பணி நீக்க நடவடிக்கைக்குக் காரணம் கொரோனா தொற்றை அடுத்துக் கடந்த 2 ஆண்டுகளாக ஐரோப்பிய நாடுகளில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதன் விளைவாகவே தற்போது அனைத்து முன்னணி நிறுவனங்களிலும் இந்த பணி நீக்கம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதற்கு அனைத்து நிறுவனங்களும் கூறும் காரணங்களும் ஒன்றாகவே இருக்கிறது. "முதலீடுகள் மற்றும் லாபம் இல்லாததால் செலவுகளைக் குறைக்கவே பணி நீக்கம் செய்யப்படுகிறது" என அனைத்து நிறுவனங்களும் இதே கருத்தையே கூறி வருகின்றனர்.

தற்போது ஐடி, மென்பொருள் நிறுவனங்களைத் தொடர்ந்து வணிக நிறுவனமாக Goldman Sachs குழுமத்தில் இருந்து 3000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாக அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Goldman Sachs குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டேவிட் சாலமன் கடந்த வாரம் வணிக கூட்டத்திற்கு ஊழியர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து கூட்டத்திற்கு வந்தவர்களிடம் நமது நிறுவனத்திலிருந்து 3000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பை கேட்டு ஊழியர்கள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் அவர்கள் அனைவரையும் அன்றைய தினமே அலுவலகங்களில் இருந்து அனுப்பிவைத்துள்ளனர். இப்படி எல்லா பக்கமும் பணி நீக்கம் செய்யப்பட்டு வருவது ஐ.டி போன்ற நிறுவனங்களில் வேலைபார்த்து வருபவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: Spotify-ஐ விட்டுவைக்காத layoff.. 400 பேரை பணி நீக்கம் செய்யப் போவதாக அறிவிப்பு: பீதியில் ஊழியர்கள்!