உலகம்

“10,000 ஊழியர்களை வேலையை விட்டு தூக்கிய மைக்ரோசாப்ட்” : அடுத்த குறி யார்? - வெளியான அதிர்ச்சி தகவல்!

உலகம் முழுவதும் ஐ.டி நிறுவனங்களில் செல்வாக்கு படிப்படியாகக் குறைந்து வருகிறது. ஒருகாலத்தில் ஐ.டி நிறுவனத்தில் வேலைபார்க்கும் ஊழியர்களுக்கு அதிகமான ஊதியம் கொடுக்கப்பட்டது. ஆனால் தற்போது அங்கும் ஊதிய வெட்டு, ஆட்கள் குறைப்பு போன்றவை தொடர்கதையாக மாறிவிட்டது.

கொரோனா காலத்தில் ஐ.டி நிறுவனங்கள் கடுமையான சிக்கல்களை எதிர்கொண்டது. இதனால் பல நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை கொரோனா என்ற இக்கட்டான காலத்திலும் வேலையிலிருந்து வெளியேற்றியது.

மேலும் தங்கள் நிறுவன ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலைபார்க்க வலியுறுத்தியது. கொரோனா தொற்று பரவல் குறைந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் பல நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை இன்னமும் வீட்டிலிருந்தே வேலை பார்க்க வலியுறுத்தி வருகிறது. இதனால் ஊழியர்கள் மன மற்றும் உடல் ரீதியான பல பிரச்னைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

அதேபோல் அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி காரணமாக அங்குத் தலைமையிடமாகக் கொண்டு இந்தியாவில் செயல்படும் இன்ஃபோசிஸ், விப்ரோ போன்ற ஐ.டி நிறுவனங்கள் கடும் பொருளாதார சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது.

இதனால் தங்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளைச் சமாளிப்பதற்காக ஐ.டி நிறுவனங்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அண்மையில்தான் முன்னணி ஐ.டி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு வழங்கி வந்த போனஸ் போன்ற சிறப்புச் சலுகைகளை நிறுத்தின. இருப்பினும் பொருளாதார சிக்கலை ஐ.டி நிறுவனங்களால் சமாளிக்க முடியாமல் தவித்து வருகின்றன.

இதன் காரணமாக ஐ.டி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கி வருகிறது. கடந்த சில வாரங்களில் மட்டும் முன்னணி ஐடி நிறுவனங்கள் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களை பணியிலிருந்து நீக்கியுள்ளதாகத் தகவல் வெளிவந்துள்ளது.

மேலும் ட்விட்டர், ஃபேஸ்புக், அமேசான், பைஜூஸ் போன்ற முன்னணி நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது. அதன்படி மைக்ரோசாப்ட் நிறுவனம் இன்று சுமார் 10ஆயிரம் ஊழியர்களை பணியில் இருந்து நீக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மனித வளம் மற்றும் பொறியியல் பிரிவில் 10 ஆயிரம் ஊழியர்களை மைக்ரோசாப்ட் நீக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Also Read: மக்களே உஷார்.! SWIGGY ஊழியர்களை குறிவைக்கும் கும்பல்.. LOAN APP மூலம் நூதன முறையில் பண மோசடி !