உலகம்

ட்விட்டரை வாங்கி அங்கு இருக்கும் பொருள்களை விற்பனை செய்யும் எலான் மஸ்க்.. என்ன ஆனது இந்த பணக்காரருக்கு ?

உலகின் பிரபலமான சமூக வலைத்தளமான ட்விட்டரை உலகின் முதல் பணக்காரரான எலான் மஸ்க் முழுமையாகக் கைப்பற்றப் போவதாகக் கூறப்பட்டு வந்த நிலையில், பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே ஒருவழியாக ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளராக எலான் மஸ்க் ஆகியுள்ளார்.

ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளரான கையோடு ட்விட்டரில் தலைமை நிதி அதிகாரி நெட் சேகல், CEO பராக் அகர்வால் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலரையும் அடுத்தடுத்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.மேலும் கிட்டத்தட்ட 50 % ட்விட்டர் ஊழியர்களுக்கு பணிநீக்க செய்தி அனுப்பப்பட்டுள்ளது. எலான் மஸ்க்கின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே ட்விட்டரை கைப்பற்றிய கையோடு இனி ட்விட்டரில் 'ப்ளூடிக்' பெற மாதம் இந்திய மதிப்பில் ரூ.719 சந்தா கட்ட வேண்டும் என எலான் மஸ்க் அறிவித்தார். அவரின் இந்த அறிவிப்புக்கும் எதிர்ப்பு எழுந்தது. ஆனாலும் தனது முடிவில் எலான் மஸ்க் பின்வாங்காமல் இருந்தார். மாத சந்தா செலுத்தக் கூடிய யார் வேண்டுமானாலும் ப்ளூ டிக் பெறலாம் என மஸ்க் திருத்தம் செய்திருந்ததால் சந்தா கட்டிய எல்லாருக்கும் எந்த சரிபார்ப்பும் இல்லாமல் ப்ளூ டிக் வழங்கப்பட்டது.

ஆனால் முன்னணி நிறுவனங்கள் மற்றும் பிரபலங்கள் பெயரில் போலி ப்ளூ டிக் கொண்ட கணக்குகள் வலம்வருவது ட்விட்டர் மீதான நம்பிக்கையை குலைத்துள்ளது.அதைத் தொடர்ந்து ப்ளூ டிக்' சந்தா வழங்குவதை டிவிட்டர் நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தியது.

அதைத் தொடர்ந்து இரண்டு நாளுக்கு முன்னர் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ப்ளூ டிக் சேவை ட்விட்டர் நிறுவனம் மீண்டும் அமலுக்கு வந்துள்ளது. சாதாரண வாடிக்கையாளர்கள் 9 டாலர் கொடுத்ததும் ஐபோன் சந்தாதாரர்கள் 11 டாலர்கள் கொடுத்தும் இந்த சேவையை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அடுத்த அதிரடியாக ட்விட்டர் தலைமையகம் அமைந்துள்ள சான்பிரான்சிஸ்கோ அலுவலகத்தில் பொருள்களை ஏலம் விட எலான் மஸ்க் முடிவுசெய்துள்ளார். அதன்படி தலைமை அலுவலகத்தில் உள்ள ட்விட்டர் பறவையின் மாதிரி, இருக்கைகள், காபி தயாரிப்பு இயந்திரம், பிரிட்ஜ், புராஜெக்டர் சமையல் இயந்திரங்கள் போன்றவற்றை ஏலம் விடப்படுவதாக கூறப்பட்டுள்ளது. வரும் ஜனவரி 17-ம் தேதி, இந்தப் பொருள்கள் ஏலம் விடப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Also Read: பருத்திவீரன் 2 : “ரெண்டு பேரும் செத்து போய்ட்டாங்க.. எங்க இருந்து கூட்டி வாறது..” - இயக்குநர் அமீர் கலகல!