உலகம்

கொரோனா வைரஸை உருவாக்கியதே அமெரிக்க அரசுதான் - ஆய்வகத்தில் பணியாற்றிய அமெரிக்கா விஞ்ஞானி அதிர்ச்சி தகவல் !

கடந்த 2019ம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று சில மாதங்களில் உலகெங்கும் பரவி தற்போது வரை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொரோனா தொற்றை சீனாவே உருவாக்கி உலகெண்டும் பரப்பியது என அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகள் கடும் குற்றச்சாட்டை முன்வைத்தன.

இந்த குற்றசாட்டை தொடர்ந்து சீனா மறுத்துவந்தாலும், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இந்த குற்றசாட்டை தொடர்ந்து கூறி வந்தன. பின்னர் கொரோனா வைரஸ் தொடர்பான ஆய்வுகள் அதிகரித்த நிலையில், இத்தகைய வைரஸை ஆய்வகங்களில் உருவாக்க வாய்ப்பில்லை, இது இயற்கையாகதான் பரிணமித்திருக்க வேண்டும் என மேற்கத்திய நாடுகளில் நடந்த சில ஆய்வு முடிவுகள் வெளியாகின.

கொரோனா வைரஸ் முதலில் சீனாவின் உகான் நகரில் கண்டறியப்பட்டது. அதிலும் அங்கிருந்த கடல் உணவு சந்தையில் இருந்தே இந்த வைரஸ் மனிதருக்கு பரவியிருக்க வேண்டும் என கூறப்பட்ட நிலையில், அமெரிக்க அரசின் நிதியுதவியை கொண்டே கொரோனா வைரஸ் கிருமி சீனாவில் உள்ள ஆராய்ச்சி மையத்தில் உருவாக்கப்பட்டது என அந்த ஆய்வகத்தில் பணியாற்றிய அமெரிக்கா ஆய்வாளர் கருத்து தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த ஆண்ட்ரூ ஹஃப் என்ற விஞ்ஞானி சீனாவின் வூஹான் வைராலஜி மையத்தில் சிறிது காலம் பணியாற்றினார். இவர் தற்போது 'The Truth About Wuhan' என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். அதில்,

10 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு வகையான கொரோனா வைரஸ்களை வூஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி ஆய்வகம் ஆய்வு செய்து வருகிறது. அங்கிருந்துதான் இந்த கொரோனா வைரஸ் கசிந்துள்ளது. கொரோனா வைரஸ் இரண்டு வருடங்களுக்கு முன் மனிதனால் உருவாக்கப்பட்டது.

அமெரிக்க அரசின் நிதியுதவியை கொண்டே, இந்த கிருமி சீனாவில் உள்ள ஆராய்ச்சி மையத்தில் உருவாக்கப்பட்டது. இத்தகைய ஆபத்தான 'உயிரி தொழில்நுட்பத்தை' சீனர்களுக்கு மாற்றியதற்கு அமெரிக்க அரசாங்கமே காரணம்" எனக் கூறியுள்ளார். இவர் எழுதிய புத்தகத்தின் சில பகுதிகள் ஊடகங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் அமெரிக்க அரசு உரிய விளக்கம் அளிக்கவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Also Read: வேலையே கொடுப்பதில்லை.. ஊதியம் மட்டும் ஒரு கோடி.. வேதனையில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த இளைஞர்!