உலகம்
ஹிஜாப் விவகாரத்தில் மக்கள் போராட்டத்தின் முன் பணிந்தது ஈரான் அரசு.. கண்காணிக்கும் போலீஸ் பிரிவு கலைப்பு !
கடந்த 1979-ம் ஆண்டு இஸ்லாமிய புரட்சி என்ற பேட்டரில் ஈரானில் நிலவிவந்த முகமது ரிசா ஷா ஆட்சியை அகற்றி ருஹல்லா அலி கொமேனி தலைமையிலான அரசு பதவிக்கு வந்தது. அதன் பின்னர் மதவாத அடக்குமுறைகள் அதிகரித்தன.பெண்கள் முக்காடு அணியவேண்டும் போன்ற பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
சமீபத்தில் பெண்கள் ஆடை அணியும் விதத்தை கண்காணிக்க 'காஸ்த் எர்ஷாத்' என்ற சிறப்புப் பிரிவு அரசால் ஆரம்பிக்கப்பட்டு பெண்கள் தீவிரமான கண்காணிக்கப்பட்டனர். இந்த சிறப்பு பிரிவு படையினரால் கடந்த செப்டம்பர் 13-ம் தேதி மாஷா அமினி (22) என்ற இளம்பெண் முறையாக ஹிஜாப் அணியவில்லை என குற்றம்சாட்டி கைது செய்யப்பட்டார்.
சிறையில் அவர் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்த நிலையில், ஆட்சிக்கு எதிராக பெண்கள் கொதித்தெழுந்தனர். முக்கிய நகரங்களில் பெண்கள் வெளிப்படையாகவே ஆடை கட்டுப்பாட்டுக்கு எதிராக தங்கள் தலைமுடிகளை அறுத்து எறிந்தனர். இந்த போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் அரச படைகளால் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கொடூரமாக தாக்கும் ஈரான் அரசுக்கு பல்வேறு நாடுகள் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. எனினும் அங்கு அரச அடக்குமுறை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. நாடு தழுவிய அளவில் அங்கு போராட்டம் கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது.இந்த போராட்டம் கத்தாரில் நடைபெற்று வரும் உலகக்கோப்பையில் போராட்டத்திலும் எதிரொலித்தது. கால்பந்து உலககோப்பைக்கு ஈரான் அணி தகுதி பெற்றுள்ள நிலையில், அந்த அணி தனது முதல் போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொண்டது.
இந்த போட்டி தொடங்கும் முன்னர் இரு நாடுகளின் தேசியகீதம் ஒலிக்கப்பட்டது. அப்போது தங்கள் நாட்டில் நடக்கும் போராட்டத்துக்கு ஆதரவாகவும், அரசின் அடக்குமுறையை கண்டித்தும் தங்கள் நாட்டின் தேசிய கீதத்தை பாடாமல் ஈரான் வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களின் இந்த செயல் பல்வேறு தரப்பினரின் பாராட்டை பெற்றுள்ளது.
ஆனால் அதேவீரர்கள் அடுத்தடுத்த போட்டியில் தேசிய கீதத்தை பாடி அதிர்ச்சி கொடுத்தனர். ஈரான் அரசின் அழுத்தம் காரணமாக அவர்கள் தேசிய கீதம் பாட கட்டாயப்படுத்தப்பட்டனர் என்று கூறப்பட்ட நிலையில், ஈரான் கால்பந்து அணியின் செயலுக்கு அந்நாட்டு மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.
மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்ய சொந்த நாட்டு வீரர்களை அந்நாட்டு மக்களும் புறம்தள்ளியுள்ளனர். அமெரிக்க அணியுடன் மோதிய ஈரான் அந்த போட்டியில் தோல்வியைத் தழுவியது. இதன் காரணமாக அந்த நாட்டின் பல்வேறு இடங்களிலும் தங்கள் நாட்டின் தோல்வியை பொதுமக்கள் சாலைகளுக்கு வந்து தோல்வியை உற்சாகமாக கொண்டாடினர். அப்படி ஈரானின் தோல்வியைக் கடற்கரையில் வைத்து கொண்டாடிய மெஹ்ரான் சமக் என்னும் இளைஞரை ஈரான் பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொலை செய்துள்ளது உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தகவலை ஓஸ்லோவை அடிப்படையாகக் கொண்ட மனித உரிமை அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்த சம்பவத்துக்கு பல்வேறு உலகநாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில் சுமார் இரண்டு மாதங்களுக்கு மேல் நடந்து வந்த போராட்டத்தின் காரணமாக ஈரான் அரசு தனது நிலையில் இருந்து பின்வாங்கி மக்கள் போராட்டத்தின் முன் பணிந்துள்ளது. இதுதொடர்பாக வெளியான அறிவிப்பில், பொது வெளியில் ஹிஜாப் அணிவதை உறுதிப்படுத்தும் அறநெறி காவல்துறை என்ற பிரிவை ஈரான் அரசு கலைத்திருக்கிறது. ஆனால் அவை நிரந்தரமாக கலைக்கப்பட்டதா இல்லை தற்காலிகமானதா என ஈரான் அரசு தரப்பிலிருந்து அறிவிக்கப்படவில்லை. எனினும் மக்களின் தொடர் போராட்டத்தின் விளைவாக இது நடந்துள்ளது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
"பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக அதிமுகவே முழுமையாக ஒப்புக்கொள்ளவில்லை" - முரசொலி விமர்சனம்.
-
"ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் களத்தில் கண்துஞ்சாமல் செயல்பட்டு, மக்களைக் காப்போம்" - முதலமைச்சர் உறுதி !
-
அடுத்த இரண்டு நாட்களுக்கு வெளுக்கப்போகும் மழை... எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்? - விவரம் உள்ளே!
-
பருவமழை குறித்து திமுக சார்பில் நாளை ஆலோசனைக் கூட்டம்... தலைமைக் கழகம் அறிவிப்பு !
-
காவலர் வீரவணக்க நாள் விழா : 175 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்!