உலகம்

“அவர் என்னை குதிக்க சொன்னார்..” - 37,000 அடி உயரத்தில் இருந்து குதிக்க முயன்ற பெண்.. பகீர் வாக்குமூலம் !

அமெரிக்கா - டெக்சாசில் இருந்து கொலம்பஸுக்கு சென்றுக் கொண்டிருந்த 'Southwest Flight 192' என்ற விமானத்தில் பல்வேறு பயணிகள் பயணித்தனர். அப்போது விமானம் சுமார் 37,000 அடி உயரத்தில் பறந்துக் கொண்டிருந்தது. அந்த சமயத்தில் விமானத்தின் இருக்கையில் அமர்ந்திருந்த 34 வயதுடைய எலோம் அக்பெக்னினோ என்ற பெண் ஒருவர் திடீரென எழுந்து விமான ஊழியரை தள்ளிவிட்டு பக்கவாட்டு கதவைத் திறக்க முயன்றார். இதனை கண்ட சக பயணிகள் உடனே அந்த பெண்ணை இறுக்கி பிடித்து தடுத்தனர்.

மேலும் அந்த பெண் விடாப்பிடியாக விமான கதவை திறக்க முயன்றதால், ஆர்கன்சாஸில் உள்ள பில் & ஹிலாரி க்ளின்டன் தேசிய விமான நிலையத்தில் சவுத்வெஸ்ட் விமானம் அவசரமாக தரையிறக்கியிரக்கப்பட்டது. பின்னர் அவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அதன்படி இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, போலீசார் சார்பாக நீதிமன்றத்தில் ஆவணம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது. அதில், பறக்கும் விமானத்தின் கதவைத் திறக்க முயற்சிக்கும் போது எலோம் அக்பெக்னினோ, "'ஜீசஸ் என்னை ஓஹியோவுக்குப் பறக்கச் சொன்னார், ஜீசஸ் விமானத்தின் கதவைத் திறக்கச் சொன்னார்' என்பதையே திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டு, தனது தலையை இடித்துக் கொண்டிருந்தார்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து கைது செய்யப்பட்ட பெண்ணிடம் விசாரித்ததில், அவர் ஒரு போதகரைச் சந்திக்க மேரிலாந்திற்குச் செல்வதாக அதிகாரிகளிடம் கூறியிருக்கிறார் என்றும் அவரிடம் எந்த லக்கேஜும் இல்லை என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து விமான ஊழியர் ஒருவர் கூறுகையில், "அந்த பெண் திடீரென்று தனது இருக்கையில் இருந்து எழுந்து கதவுக்கு அருகே சென்று, வெளியே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தார். இதனால் அவரை கழிவறைக்கு செல்ல வேண்டுமானால், சென்று விட்டு இருக்கையில் அமருங்கள் என்றோம். ஆனால் அதனை செவியில் வாங்காத அவர் மீண்டும் வெளியேவே உற்று பார்த்துக்கொண்டிருந்தார்.

சிறிது நேரத்திலேயே வேறொரு ஊழியரை தள்ளிவிட்டு பின்பக்க கதவைத் திறக்க முயன்றார். பின்னரே சக பயணிகள், சக ஊழியர்கள் உட்பட அனைவரும் அவரை பிடித்து இருக்கையில் அமரவைத்தனர். இதில், ஆத்திரப்பட்ட அந்த பெண், எங்கள் ஊழியர் ஒருவரது காலில் கடுமையாக கடித்தார். இதில் அவர் கடும் காயமடைந்தார். மேலும் அவர் தன்னை கர்த்தர் தான் குதிக்க சொன்னதாக கூறிக்கொண்டே இருந்தார்." என்றார்.

Also Read: “விபத்துல இறந்தா 2 கோடி..” - மனைவியை கொன்று விபத்து போல் நாடகமாடிய கணவன்.. ராஜஸ்தானில் அதிர்வலை !