உலகம்

'TWITTER ஊழியர்கள் சாப்பாட்டுக்கு மட்டும் ரூ.100 கோடி செலவு' - அதிர்ச்சி தகவலை வெளியிட்ட எலான் மஸ்க் !

உலகின் பிரபலமான சமூக வலைத்தளமான ட்விட்டரை உலகின் முதல் பணக்காரரான எலான் மஸ்க் முழுமையாகக் கைப்பற்றப் போவதாகக் கூறப்பட்டு வந்த நிலையில், பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே ஒருவழியாக ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளராக எலான் மஸ்க் ஆகியுள்ளார்.

ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளரான கையோடு ட்விட்டரில் தலைமை நிதி அதிகாரி நெட் சேகல், CEO பராக் அகர்வால், சட்டத்துறைத் தலைவர் விஜயா கட்டே, பொது ஆலோசகர் சீன் எட்கல் என உயர் அதிகாரிகள் பலரையும் அடுத்தடுத்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.மேலும் அதில் பணியாற்றும் ஊழியர்கள் சிலர் உடனடியாக பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்ற கருத்தும் பரவலாக இருந்தது அதை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது ஒரு மெயில் ட்விட்டர் ஊழியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அதில், நீங்கள் வேலையில் இருந்து நீக்கப்பட்டிருந்தால் அதன் விவரம் உங்களது தனிப்பட்ட இமெயில் முகவரிக்கு அனுப்பப்படும் என கூறப்பட்ட நிலையில், கிட்டத்தட்ட 50 % ட்விட்டர் ஊழியர்களுக்கு பணிநீக்க செய்தி அனுப்பப்பட்டுள்ளது. எலான் மஸ்க்கின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

அதைத் தொடர்ந்து ட்விட்டர் ஊழியர்களை நேரடியாக சந்தித்த எலான் மஸ்க், வாரத்திற்கு 80 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும் என்றும், முன்புபோல அலுவலகத்தில் இலவசமாக உணவு போன்ற எந்த ஒரு சலுகையும் வழங்கப்படாது என்று கூறியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், டிவிட்டரின் சான்பிரான்சிஸ்கோ தலைமை அலுவலகத்தில் ஊழியர்களின் ஒரு வருட உணவுக்கு ரூ.100 கோடி செலவிடப்படுவதாக எலான் மஸ்க் கூறியுள்ளார். இது தொடர்பாக அவரின் பதிவில் " தலைமை அலுவலகத்தில் அதிகபட்சமாக 25%, குறைந்தபட்சமாக 10% ஊழியர்கள் மட்டுமே சாப்பிட்டுள்ளனர். ஆனால் உணவு சாப்பிடும் ஊழியர்களை விட அதனை சமைப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இரவு வேளைகளில், யாருமே இல்லாமல் உணவு சமைக்கப்பட்டுள்ளது. இதனால்தான் உணவு சலுகையை ரத்து செய்தேன்" என பதிவிட்டுள்ளார்.

Also Read: தமிழக மாணவர்களுக்கு கல்விக்கடன் கொடுக்க மறுத்த HDFC வங்கி.. பதிலடி கொடுக்க ‘செக்’ வைத்த மதுரை MP !