உலகம்

பிரபலங்கள் பெயரில் போலி ப்ளூ டிக்.. திடீரென நிறுத்தப்பட்ட சேவை..திருப்பியடிக்கும் எலான் மிஸ்க்ன் திட்டம்!

உலகின் பிரபலமான சமூக வலைத்தளமான ட்விட்டரை உலகின் முதல் பணக்காரரான எலான் மஸ்க் முழுமையாகக் கைப்பற்றப் போவதாகக் கூறப்பட்டு வந்த நிலையில், பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே ஒருவழியாக ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளராக எலான் மஸ்க் ஆகியுள்ளார்.

ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளரான கையோடு ட்விட்டரில் தலைமை நிதி அதிகாரி நெட் சேகல், CEO பராக் அகர்வால், சட்டத்துறைத் தலைவர் விஜயா கட்டே, பொது ஆலோசகர் சீன் எட்கல் என உயர் அதிகாரிகள் பலரையும் அடுத்தடுத்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.மேலும் அதில் பணியாற்றும் ஊழியர்கள் சிலர் உடனடியாக பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்ற கருத்தும் பரவலாக இருந்தது. அதை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது ஒரு மெயில் ட்விட்டர் ஊழியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அதில், நீங்கள் வேலையில் இருந்து நீக்கப்பட்டிருந்தால் அதன் விவரம் உங்களது தனிப்பட்ட இமெயில் முகவரிக்கு அனுப்பப்படும் என கூறப்பட்ட நிலையில், கிட்டத்தட்ட 50 % ட்விட்டர் ஊழியர்களுக்கு பணிநீக்க செய்தி அனுப்பப்பட்டுள்ளது. எலான் மஸ்க்கின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே ட்விட்டரை கைப்பற்றிய கையோடு இனி ட்விட்டரில் 'ப்ளூடிக்' பெற மாதம் இந்திய மதிப்பில் ரூ.719 சந்தா கட்ட வேண்டும் என எலான் மஸ்க் அறிவித்தார். அவரின் இந்த அறிவிப்புக்கும் எதிர்ப்பு எழுந்தது. ஆனாலும் தனது முடிவில் எலான் மஸ்க் பின்வாங்காமல் இருந்தார். தற்போதைய நிலையில், இந்த கட்டணவிதிப்பு அமல் படுத்தப்பட்டுள்ள நிலையில், பலரும் அதற்கான தொகையை செலுத்திவருகின்றனர்.

மேலும், மாத சந்தா செலுத்தக் கூடிய யார் வேண்டுமானாலும் ப்ளூ டிக் பெறலாம் என மஸ்க் திருத்தம் செய்துள்ளார். இதன் காரணமாக சந்தா கட்டிய எல்லாருக்கும் எந்த சரிபார்ப்பும் இல்லாமல் ப்ளூ டிக் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் பலர் போலியான பெயரில் இந்த ப்ளூ டிக்கை பெற்றுள்ள சம்பவம் தற்போது வெளியாகி எ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னணி நிறுவனங்கள் மற்றும் பிரபலங்கள் பெயரில் போலி ப்ளூ டிக் கொண்ட கணக்குகள் வலம்வருவது ட்விட்டர் மீதான நம்பிக்கையை குலைத்துள்ளது. இந்த நிலையில், ப்ளூ டிக்' சந்தா வழங்குவதை டிவிட்டர் நிறுவனம் நேற்று தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. ஊழியர் பற்றாக்குறை காரணமாக இந்த குழப்பம் எழுந்துள்ளதாக கூறப்படும் நிலையில், ட்விட்டர் நிறுவனத்தின் நம்பிக்கை தற்போது குறைந்துள்ளது. இதுபோன்ற காரணங்களால் விரைவில் பொதுமக்களிடையே ட்விட்டர் செல்வாக்கு இழக்கும் என்று கூறப்படுகிறது.

Also Read: களத்தில் நிகழ்ந்த ஒற்றை தவறு.. காயத்தால் இங்கிலாந்திடம் கோப்பையை இழந்த பாகிஸ்தான்!சாம்பியனான இங்கிலாந்து!