உலகம்

"இஷ்டம் இருந்தா வாங்க,, இல்லை ராஜினாமா செய்துட்டு போங்க" - TWITTER ஊழியர்களுக்கு எலான் மஸ்க் மிரட்டல் !

உலகின் பிரபலமான சமூக வலைத்தளமான ட்விட்டரை உலகின் முதல் பணக்காரரான எலான் மஸ்க் முழுமையாகக் கைப்பற்றப் போவதாகக் கூறப்பட்டு வந்த நிலையில், பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே ஒருவழியாக ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளராக எலான் மஸ்க் ஆகியுள்ளார்.

ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளரான கையோடு ட்விட்டரில் தலைமை நிதி அதிகாரி நெட் சேகல், CEO பராக் அகர்வால், சட்டத்துறைத் தலைவர் விஜயா கட்டே, பொது ஆலோசகர் சீன் எட்கல் என உயர் அதிகாரிகள் பலரையும் அடுத்தடுத்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.மேலும் அதில் பணியாற்றும் ஊழியர்கள் சிலர் உடனடியாக பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்ற கருத்தும் பரவலாக இருந்தது அதை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது ஒரு மெயில் ட்விட்டர் ஊழியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அதில், நீங்கள் வேலையில் இருந்து நீக்கப்பட்டிருந்தால் அதன் விவரம் உங்களது தனிப்பட்ட இமெயில் முகவரிக்கு அனுப்பப்படும் என கூறப்பட்ட நிலையில், கிட்டத்தட்ட 50 % ட்விட்டர் ஊழியர்களுக்கு பணிநீக்க செய்தி அனுப்பப்பட்டுள்ளது. எலான் மஸ்க்கின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பணியில் இருக்கும் ட்விட்டர் ஊழியர்களுக்கு எலான் மஸ்க் மிரட்டல் விடுக்கும் விதமாக பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ட்விட்டர் ஊழியர்களை நேரடியாக சந்தித்த எலான் மஸ்க், வாரத்திற்கு 80 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும் என்றும், முன்புபோல அலுவலகத்தில் இலவசமாக உணவு போன்ற எந்த ஒரு சலுகையும் வழங்கப்படாது என்று கூறியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், கொரோனா பெருந்தொற்று காலம் முடிவடைந்ததால் இனி எந்த ஊழியருக்கும் வீட்டிலிருந்து பணி புரியவேண்டாம் என்றும் கூறியுள்ளார். அதோடு இதெற்கெல்லாம் ஒப்புக் கொண்டால் மட்டும் வேலைக்கு வரலாம் என்றும், இல்லாவிட்டால் வீட்டிலேயே இருந்துகொள்ளலாம், உங்கள் ராஜினாமாக்களை நாங்கள் தாராளமாக ஏற்றுக் கொள்வோம் என்றும் கூறியுள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Also Read: "எங்களுக்கும் உங்களுக்கு உள்ள வித்தியாசம் இதுதான்" - பாகிஸ்தான் பிரதமருக்கு பதிலடி கொடுத்த இந்திய வீரர் !