உலகம்

”இம்ரான்கான், நடிப்பில் ஷாருக்கான்-சல்மான்கானை மிஞ்சிவிட்டார்”-பாக். அரசியல் கட்சித் தலைவர் விமர்சனம் !

பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான் கான் மீது, கடந்த ஏப்ரல் மாதம் நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பதவி விலகினார். எனவே தற்போது பாகிஸ்தானில் பிரதமராக பதவி வகித்து வருபவர் ஷெபாஸ் ஷெரீப். இவரது ஆட்சியில் பல்வேறு பிரச்னைகள் நிலவுவதாக கூறி, அந்நாட்டு எதிர்க்கட்சிகள், முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தலைமையில் அவ்வப்போது போராட்டம் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இப்படியாக இம்ரான் கானுக்கு எதிராகவும் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு பல குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறது. மேலும் அவரை எம்.பி. பதவியில் இருந்தும் தகுதி நீக்கம் செய்ய பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. இந்த நடவடிக்கையை எதிர்த்து எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடத்துமாறு கட்சித் தொண்டர்களுக்கும், இம்ரான் கானின் ஆதரவாளர்களுக்கும் அவரது கட்சி சமீபத்தில் அழைப்பு விடுத்தது.

அதனை ஏற்று கடந்த 2 நாட்களுக்கு முன்பு முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தலைமையில் பாகிஸ்தானின் பஞ்சாப் பகுதியில் பேரணி ஒன்று நடைபெற்றது. இந்த பேரணியில் திடீரென மர்ம நபர்கள் சிலர் இம்ரான் கான் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால் பரபரத்து போன அந்த பேரணியில் கலந்து கொண்டவர்கள் தலைதெறிக்க ஓட, சிலர் காலில் குண்டு காயமடைந்த இம்ரான் கானை மீட்டு லாகூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இந்த தாக்குதலுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்த நிலையில் பாகிஸ்தான் ஜனநாயக இயக்கத்தின் தலைவர் மௌலானா ஃபஸ்லுர் ரஹ்மானும் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தார். ஆனால் தற்போது அவர் இம்ரான்கானை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர் ”துப்பாக்கி சூடு நிகழ்வைப் பற்றி கேள்விப்பட்ட நான் ஆரம்பத்தில் இம்ரான் கான் மீது அனுதாபம் கொண்டேன். ஆனால் இப்போது அது ஒரு நாடகமாகத் தெரிகிறது. நடிப்பில் இம்ரான் கான் ஷாருக்கான் மற்றும் சல்மான் கான் ஆகியோரை மிஞ்சிவிட்டார் என்பது இதிலிருந்து தெரிகிறது. இம்ரான் கான் காலில் பாய்ந்த தோட்டா உடைந்தது எப்படி சாத்தியம்? நாம் வெடிகுண்டு துண்டு பற்றி தான் கேள்விப்பட்டிருக்கிறோமே தவிர தோட்டா துண்டு பற்றி அல்ல” என்றும் விமர்சித்துள்ளார்.

Also Read: ஆந்திரா : பெற்ற மகளை கொடூரமாக கொன்ற தந்தை... கொலைக்கான காரணத்தை அவரே வீடியோவாக வெளியிட்ட பகீர் சம்பவம் !