உலகம்

100 சுற்றுலாப்பயணிகளை கடத்திய அமேசான் பழங்குடிகள்.. வெளிவந்த அதிர்ச்சி காரணம்.. பதைபதைப்பில் பெரு!

தென்னமெரிக்காவில் அமைந்துள்ள அமேசான் காடுகளில் பல நூற்றாண்டுகளாக பழங்குடி மக்கள் வசித்து வந்தனர். அந்த காட்டுப்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு வந்ததால் பழங்குடி மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வந்தது

அதைத் தொடர்ந்து சில பழங்குடி மக்கள் அரசோடு இணைந்து அமேசான் காடுகளில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு அரசின் சார்பில் தொடர்ந்து உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. அமேசான் காடுகளில் அரியவகை உயிரினங்களும், ஏராளமான விலங்குகளும் இருப்பதால் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் அங்கு சுற்றுலாவுக்கு வருகின்றனர்.

அந்த வகையில் அமெரிக்கா, ஸ்பெயின், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த சுமார் 100 பேர் அமேசான் காடுகளுக்கு சுற்றுலாவுக்கு சென்றுள்ளனர். அப்போது அவர்களை அங்குள்ள பழங்குடி மக்கள் கடத்தியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குனினிகோ எனும் ஆற்றில் இந்த சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து கொண்டிருந்தபோது இந்த கடத்தல் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவல் வெளிவந்ததும் பெரு அரசு சார்பில் பழங்குடி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து அனைத்து சுற்றுலா பயணிகளையும் பழங்குடியினர் விடுவித்துள்ளனர். 8 நாட்கள் அடைத்து வைக்கப்படுவர் என கூறப்பட்ட நிலையில், ஒரே நாளில் சுற்றுலா பயணிகள் விடுவிக்கப்பட்டதாக செய்தித்தாள்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த செப்டம்பர் மாதம் 2500 டன் கச்சா எண்ணெய் குனினிகோ ஆற்றில் கசிந்த நிலையில், அதனை அகற்ற பழங்குடி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துவந்த நிலையில் அந்த கோரிக்கை நிறைவேற்றப்படாமல் இருந்துள்ளது. இதன் காரணமாகவே அரசுக்கு எச்சரிக்கை விடுக்க சுற்றுலா பயணிகள் கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

Also Read: "என்னை திட்டித் தீர்த்தாலும் அதற்கு கட்டணம் ரூ.662 செலுத்தவேண்டும்" -விமர்சனங்களுக்கு எலான் மஸ்க் பதில் !