உலகம்

ஆண்டுக்கு 1 கோடி ஓய்வூதியம்.. 45 நாள் பதவியில் இருந்த இங்கிலாந்து பிரதமருக்கு அடித்த யோகம் !

இங்கிலாந்தின் பழமைவாத ( கன்சர்வேடிவ் ) கட்சியைச் சேர்ந்த போரிஸ் ஜான்சன் 2019ம் ஆண்டில் ஆட்சிக்கு வந்ததிலிருந்தே உலகளவில் பல விமர்சனங்களுக்கு உள்ளானார். அவரது அமைச்சரவை சகாக்களே அவர் மீது கடும் விமர்சனத்தை வைத்தனர்.

இதன் காரணமாக அவர் பதவி விலகினார். அதைத் தொடர்ந்து இங்கிலாந்தில் அடுத்த பிரதமராக வரப்போவது யார் என்ற கேள்வி எழுந்தது. இந்த பதவிக்கு பலர் போட்டியிட்ட நிலையில், நிதித்துறை அமைச்சராக இருந்த ரிஷி சுனக் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த லிஸ் ட்ரஸ் ஆகியோர் இறுதிசுற்றுக்கு தகுதி பெற்றனர்.

ஆரம்பத்தில் அதிக ஆதரவு பெற்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் அடுத்த சுற்று செல்ல செல்ல ஆதரவை இழந்து வந்ததாக தகவல் வெளியானது. அதன்பின்னர் பழமைவாத கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் வாக்களித்த தேர்தலில் இறுதிச்சுற்றில் வென்று லிஸ் ட்ரஸ் இங்கிலாந்தின் மூன்றாவது பெண் பிரதமராக தேர்வாகினார்.

இவர் பதவியேற்றதும் அவர் பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொண்டார். குறிப்பாக லிஸ் ட்ரஸ்ஸால் அறிவிக்கப்பட்ட புதிய பட்ஜெட்டில் செல்வந்தர்களுக்கு வரிச் சலுகை பெரும் புயலை கிளப்பியது. அரசு மக்களை விடுத்து பணக்காரர்களை வளர்த்து வருவதாக விமர்சனங்கள் எழுந்தன.அதைத் தொடர்ந்து கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் பதவியேற்ற 45 நாட்களில் இங்கிலாந்து பிரதமர் லிஸ் ட்ரஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்த நிலையில், பிரதமர் பதவியில் இருந்ததற்காக அவருக்கு வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியமாக ஆண்டுக்கு 1,15,000 பவுண்ட்கள் (இந்திய மதிப்பில் 1 கோடியே 7 லட்சம் )வழங்கப்பட இருக்கிறது. Public Duty Costs Allowance (PDCA) என்பதும் முன்னாள் பிரதமர்களுக்கான ஓய்வூதியத்தை கீழ் அவர் இந்த தொகையை பெறவுள்ளார்.

இந்த PDCA திட்டம் முன்னாள் பிரதமர் மார்கரெட் தாட்சர் ராஜினாமா செய்ததை அடுத்து, அப்போதைய அமைச்சரவை செயலாளரான சர் ராபின் பட்லரால் ஏற்பாடு செய்யப்பட்டு மார்ச் 1991 இல் அப்போதைய பிரதமர் ஜான் மேஜரால் அமலுக்கு வந்தது. இந்த PDCA ஓய்வூதியம் முன்னாள் பிரதமர்கள் இன்னும் பொது வாழ்வில் செயல்படுவதற்கு உதவுவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டது. 91க்கு பிறகு பிரதமரானவர்களுக்கு இந்த தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இதனிடையே வெறும் 45 நாட்களுக்காக லிஸ் ட்ரஸ்க்கு இந்த தொகை வழங்கக்கூடாது என் அந்நாட்டு பொதுமக்களில் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் நாட்டின் பொருளாதார நிலையை உணர்ந்து லிஸ் ட்ரஸ் தானாக முன்வந்து இந்த தொகை வேண்டாம் எனச் சொல்ல வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.

Also Read: ஹோட்டல்களில் தங்குபவர்களுக்கு நேர்ந்த அதிர்ச்சி.. நூதன முறையில் வீடியோ எடுத்து மிரட்டிய கும்பல் கைது !