உலகம்

நடுவானில் விமானத்தை துளைத்த துப்பாக்கி குண்டு.. ஜன்னல் ஓரம் அமர்ந்திருந்த பயணிக்கு நேர்ந்த சோகம் !

மியான்மரின் என்.எல்.டி கட்சியின் தலைவராக இருப்பவர் ஆங் சான் சூகி. இவர் கடந்தாண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்தார். ஆனால், தேர்தலில் மோசடி நடந்துள்ளது எனக் கூறி ஆங் சான் சூகியின் ஆட்சியை ராணுவம் கவிழ்த்தது.

இதையடுத்து ராணுவத்தின் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. ராணுவத்துக்கு எதிராக கிளர்ச்சி படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். ராணுவ ஆட்சி காரணமாக மியான்மர் நாட்டுக்கு உலகநாடுகள் ஏராளமான பொருளாதார தடைகளை விதித்துள்ளன.

இந்த நிலையில், மியான்மர் நேஷனல் ஏர்லைன்சுக்கு சொந்தமான ஒரு விமானம் ஒன்று சுமார் 3,500 அடி உயரத்தில் கிழக்கு கயா மாநிலத்தில் தலைநகரான லோய்கா விமான நிலையம் நோக்கி சென்றுகொண்டிருந்தது. அப்போது விமானநிலையம் நெருங்கியதால் விமானத்தின் பைலட் விமானத்தின் உயரத்தை குறைத்துக்கொண்டே வந்துள்ளது. அப்போது திடீரென விமானத்தில் இருந்த பயணியில் அலறல் சத்தம் கேட்டுள்ளது. உடனே விமான ஊழியர்கள் அவரை பரிசோதித்தபோது அவரின் காதில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது தெரியவந்தது.

நடுவானில் பயணியில் காதில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததால் இது சக பயணிகளின் வேலையாக இருக்கும் என பயணிகள் அனைவரிடம் சோதனை நடத்தப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் யாரிடமும் துப்பாக்கி இல்லாததால் விமானத்தை சோதித்தபோது தரையில் இருந்து சுடப்பட்ட துப்பாக்கி குண்டு விமானத்தை துளைத்து பயணியை தாக்கியது தெரியவந்தது. பின்னர் விமானம் தரையிரங்கியதும் அந்த பயணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து பேசிய ராணுவ அரசின் செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஜாவ் மின் துன் "அரசுக்கு எதிராகப் போராடும் பயங்கரவாதிகள் தான் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தி உள்ளனர்" எனக் கூறினார். ஆனால் அரசின் இந்த குற்றச்சாட்டை கிளர்ச்சி படை மறுத்துள்ளது. இந்த தாக்குதலைத் தொடர்ந்து லோகாவ் நகருக்கு செல்லும் அனைத்து விமானங்களும் காலவரையின்றி ரத்து செய்யப்படுவதாக மியான்மர் நேஷனல் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

Also Read: புதையல்,சொத்து கிடைக்கும் என நம்பிக்கை.. 6 வயது சிறுவனை நரபலி கொடுத்த இளைஞர்கள்..டெல்லியில் அதிர்ச்சி !