உலகம்

பிரேசில்: "வளர்க்க கஷ்டமா இருக்கு.. எனக்கு வேற வழி தெரியல.." :பெற்ற தாயே 2 குழந்தைகளுக்கு செய்த கொடூரம்!

பிரேசில், குராபுவா என்ற பகுதியை சேர்ந்தவர் எலியாரா பாஸ் நார்டெஸ். 31 வயதுடைய இவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு பெண் குழந்தை இருந்து வந்த நிலையில், இவரது கணவர் ஒரு விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து இவர் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். தற்போது இவரது இரண்டாவது கணவரும் இவரை விட்டு பிரிந்ததால் தனது 9 வயது மகள் மற்றும் 3 வயது மகனுடன் அந்த பகுதியில் வசித்து வந்துள்ளார்.

இதனால் மன ரீதியாக மிகவும் கஷ்டத்தில் இருந்த எலியாரா, தனது இரண்டு குழந்தைகளையும் வளர்க்க முடியாமல் தவித்து வந்துள்ளார். இதனால் அவர்களை கொல்ல திட்டமிட்டுள்ளார். அதன்படி கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தனது மகளை தலையணை மூலம் அமுக்கியும், 3 வயது மகனின் கழுத்தை துணியால் இறுக்கியும் கொன்றுள்ளார். அவர்களை கொன்று தனது படுக்கை அறையிலேயே சடலத்தை போட்டுள்ளார்.

இதையடுத்து இரண்டு வாரங்கள் கழித்து தனது வழக்கறிஞரை தொடர்பு கொண்ட எலியாரா, தனது குழந்தைகளை கொன்றதாக தெரிவித்துள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார்.

பிறகு விரைந்து வந்து எலியாரா வீட்டை சோதனை செய்தபோது, குழந்தைகள் உறங்குவதை போல் படுக்கையில் அழுகிய நிலையில் இறந்து கிடந்துள்ளனர். பிறகு அவர்களது உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்த அதிகாரிகள், தாய் எலியாராவையும் கைது செய்து விசாரித்தனர்.

விசாரணையில், பொருளாதார ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் தன் குழந்தைகளுக்கு எதுவும் செய்யமுடியவில்லை; அதனால் அவர்களை கொன்றதாக வாக்குமூலம் அளித்தார். மேலும் இருவரையும் ஒரே நாளில் கொன்றதாக எலியாரா கூறிய நிலையில், நடைபெற்ற சோதனையில் 3 வயது சிறுவன் சிறுமி இறப்பதற்கு 3 நாட்களுக்கு முன்பு கொல்ல பட்டதாக தெரியவந்துள்ளது.

இதனால் மேலும் சந்தேகமடைந்த அதிகாரிகள் தாய் எலியாராவை மீண்டும் விசாரித்து வருகின்றனர். பெற்ற குழந்தைகளை தாயே கொடூரமாக கொன்று, சடலங்களை 2 வாரம் பத்திரப்படுத்தி வைத்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: சாதி மறுப்பு திருமணம் செய்த இளைஞர்.. கொலை செய்த பெண்ணின் வளர்ப்பு தந்தை, சகோதரர்: உத்தரகாண்ட்டில் கொடூரம்