உலகம்

YOUTUBE பார்த்து செய்யப்பட்ட துப்பாக்கியால் கொல்லப்பட்டாரா ஷின்சோ அபே? கொலைக்கான காரணம் என்ன?

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே வீட்டில் தயாரித்த துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜப்பான் வரலாற்றில் அதிகமுறை பிரதமராக இருந்தவர் என்ற பெயரை பெற்றவர் ஷின்சோ அபே. இவருக்கு இந்திய அரசு பத்ம விபூஷன் விருதை வழங்கி கெளரவித்துள்ளது.

ஷின்சோ அபே வரும் ஞாயிறன்று நடைபெறவுள்ள ஜப்பான் நாடாளுமன்ற மேலவைத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் நேற்று காலை ஜப்பானின் அபே நரா நகரில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தபோது, இவரை மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

இதில் அவர் மேல் குண்டு பாய்ந்தது. பின்னர் அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். கடுமையான பாதிப்புகளுடன் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற அவருக்கு, அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

ஆனால், அன்று மாலையே மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலனின்றி ஷின்சோ அபே உயிரிழந்துள்ளார். இந்த செய்தி உலக தலைவர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய பிரதமர் உள்ளிட்ட உலக தலைவர்கள் பலரும் இவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த அரசு சார்பில் ஒரு நாள் துக்கதினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஷின்சோ அபே கொலை தொடர்பாக விசாரணை தீவிரம் அடைந்துள்ளது. ஷின்சோ அபே சுடப்பட்டபோதே சுட்டவரை போலிஸார் சுற்றிவளைத்து கைது செய்தனர். அப்போது அவரிடமிருந்த துப்பாக்கி கீழே விழுந்த நிலையில் அது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின.

ஜப்பானின் துப்பாக்கி வைத்திருக்க கடுமையான சட்டங்கள் இருக்கும் நிலையில், அவர் வைத்திருந்த துப்பாக்கி குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்தது. அந்த துப்பாக்கி யூ-டியூப் பார்த்து வீட்டிலேயே செய்யப்பட்டிருக்கும் துப்பாக்கியாக இருக்கலாம் என ஜப்பானின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குற்றவாளியின் புகைப்படத்தை சுட்டி அதில் இருக்கும் துப்பாக்கி ஒரு ஜோடி குழாய், மரத் தடுப்பு மற்றும் டேப் ஆகியவற்றை பயன்படுத்தி செய்யப்படும் துப்பாக்கி போல இருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளன.

துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டவர் 41 வயதாகும் டெட்யா யமகாமி என்பதும், அவர் ஜப்பான் கடற்படை என அழைக்கப்படும் ஜப்பானிய கடல்சார் தற்காப்பு படையின் முன்னாள் வீரர் என்ற தகவலும் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், ஷின்சோ அபே பிரதமராக இருந்தபோது அவரது நடவடிக்கையால் பாதிக்கப்பட்டதாகவும் எனவே அபேவை பழிவாங்க நீண்ட நாட்களாக திட்டம் தீட்டி அவரை கொலை செய்யும் நோக்கில் துப்பாக்கிச்சூடு நடத்தியதை யமகாமி ஒப்புக் கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Also Read: அமர்நாத் யாத்திரை - வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 15 பேர் பலி! ஏராளமானோர் காணாமல் போயுள்ளதால் அதிர்ச்சி!