உலகம்

1 வயது குழந்தையை சுட்டு கொன்ற 8 வயது சிறுவன்.. அதிர்ச்சி சம்பவத்தின் பின்னணி என்ன?

அமெரிக்காவின் புளோரிடா பகுதிக்கு விடுமுறையை கொண்டாட டிவைன் ராண்டல் என்பவர் தனது குழந்தையுடன் வந்துள்ளார். அவருடன் அவரது தோழி ஒருவரும் தனது குழந்தைகளுடன் வந்துள்ளார். அங்கு ஒரு ஹோட்டலில் இவர்கள் அறை எடுத்து தங்கியுள்ளனர்.

பின்னர் ராண்டலும் அவரது தோழியும் தங்கள் குழந்தைகளை அறையில் தனியே விட்டு சென்றுள்ளனர். அப்போது ராண்டலின் 8 வயது மகன் தன்னுடைய தந்தை மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து விளையாட்டாக சுட்டுள்ளார்.

அந்த குண்டு எதிர்பாராத விதமாக, அந்த அறையில் தூங்கி கொண்டிருந்த 1 வயது குழந்தை மீது பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் அந்த குழந்தை அங்கேயே உயிரிழந்துள்ளது. மேலும் அந்த துப்பாக்கி குண்டு அங்கு படுத்திருந்த 2 வயது குழந்தை மீதும் பாய்ந்துள்ளது. இதில் அந்த குழந்தை படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலிஸார், ராண்டலிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர் அனுமதியின்றி துப்பாக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அதோடு அவர் தங்கியிருந்த அறையில் போதை பொருள்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவில் துப்பாக்கி சூட்டால் பலியாகும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அங்கு குற்ற சம்பவங்களில் தொடர்புடையவர்கள் துப்பாக்கி உரிமம் பெற முடியாது என்ற சட்டம் சமீபத்தில் இயற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Also Read: "மோடி நீங்கள் நாட்டையே கொள்ளை அடிக்கிறீர்கள்".. இணையத்தில் வைரலான 'MONEY HEIST' பேனர்!