உலகம்

“காரில் இருந்து பெட்ரோல் திருடுவது எப்படி?” - தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியால் சர்ச்சை!

கொரோனா பெருந்தொற்று அதன் பின்னர் வந்த உக்ரைன் -ரஷ்யா போர் காரணமாக உலகெங்கும் விலை வாசி அதிகரித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக இலங்கை, பாகிஸ்தான் போன்ற நாடுகள் கடுமையான பொருளாதாரா பாதிப்பில் சிக்கியுள்ளன.

இதே போல நிலை ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான க்ரீஸிலும் நிலவுகிறது. அங்கு இதுவரை இல்லாத அளவு எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அந்நாட்டின் பணவீக்கம் கடந்த 29 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 11.3 % அளவு உயர்ந்துள்ளது. அது மேலும் அதிகரிக்கும் என்ற அச்சமும் எழுந்துள்ளது.

அங்கு பெட்ரோல் விலை இந்திய மதிப்பில் சுமார் 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல மின்சாரத்தின் விலையும் அதிகரித்துள்ளது. இதனால் அந்த நாட்டில் பெட்ரோல் திருட்டு போன்றவரி அதிகரித்து வருகின்றன.

இந்த நிலையில், கிரீஸில் செயல்பட்டுவரும் ஒரு தொலைக்காட்சி ஒன்று, காரில் இருந்து எளிமையான முறையில் எரிபொருளை எப்படி திருடுவது என்ற நிகழ்ச்சியை ஒளிபரப்பியுள்ளது.

அதில், செய்தியாளர் ஒருவர், கார் நிபுணர் ஒருவரிடம் பெட்ரோலை திருடுவது எப்படி என்று கேள்வி எழுப்ப, அந்த நபர் காரில் இருந்து பெட்ரோலை எப்படி எடுப்பது என்று விளக்கினார்.

இந்தக்காட்சி சமூகவலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக பொறுப்பு உள்ள ஒரு நிறுவனம் இதே போன்ற காட்சிகளை ஒளிபரப்பலாமா என்ற இணையவாசிகள் அந்த தொலைக்காட்சியை விமர்சித்து வருகின்றனர்.

Also Read: "இந்து கோவில்களின் மேல் மசூதிகள் கட்டப்படவில்லை" - பா.ஜ.கவின் பொய்களுக்கு பதிலடி கொடுத்த தொல்லியல் துறை!