உலகம்

கொரோனாவை அடுத்து.. 11 நாடுகளுக்கு பரவிய குரங்கு வைரஸ்: அதிர்ச்சியில் உலக நாடுகள்!

1) உலகம் முழுவதும் 52.63 கோடியை தாண்டிய கொரோனா பாதிப்பு!

உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52.63 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 52,63,80,831 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 49,61,61,920 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 2,39,20,208 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை உலகம் முழுவதும் 62,98,703 பேர் உயிரிழந்துள்ளனர்.

2) கேன்ஸ் படவிழா - அரை நிர்வாணமாக போராடிய பெண்!

பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் திரைப்பட விழாவில் பெண் ஒருவர் அரை நிர்வாண கோலத்தில் சிவப்பு கம்பளத்தில் ஓடினார். எங்களை பலாத்காரம் செய்வதை நிறுத்துங்கள் என்ற கோஷத்துடன் தனது ஆடையைக் கழற்றி வீசி அரை நிர்வாணமாக நின்றார். அந்த பெண் எதிர்ப்பாளர் உக்ரேனியக் கொடியை தனது உடலில் வரைந்து இருந்தார். அதில் எங்களை கற்பழிப்பதை நிறுத்து" என்ற வார்த்தைகள் எழுதபட்டு இருந்தது. உடனடியாக அதிகாரிகள் அவரை சூழ்ந்து ஆடையைப் போர்த்தி அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.

3) 11 நாடுகளில் பரவிய குரங்கு வைரஸ்!

11 நாடுகளில் 80 பேருக்கு குரங்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதன் பாதிப்பு உள்ளது என சந்தேகிப்பவர்கள் உடனடியாக பரிசோதனை செய்து கொண்டு, தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். கோடை காலத்தில் மக்கள் கூட்டம் கூடுவது, திருவிழாக்கள், விருந்துகள் என ஐரோப்பிய நாடுகளில் நோயின் பரவல் அதிகரிக்க கூடும் என ஐ.நா.வுக்கான ஐரோப்பிய மண்டல இயக்குனர் ஹன்ஸ் குளூஜ் கூறுகிறார். கொரோனா பெருந்தொற்று காலத்தில் மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளான கை கழுவுதல் போன்ற பிற சுகாதார விசயங்களை கடைப்பிடிப்பதும், இந்த வியாதி பரவலை கட்டுப்படுத்துவதில் முக்கியத்துவம் பெறுகிறது என குளூஜ் கூறியுள்ளார்.

4) அவசர நிலை பிரகடனத்தை திரும்பப் பெற்றது இலங்கை!

வன்முறை சம்பவங்கள் தொடராமல் இருக்க இலங்கையில் 2வது முறையாக கடந்த மே 6ம் தேதி நாடு தழுவிய அவசர நிலை பிரகனடத்தை அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவித்திருந்தார். இரண்டு வாரங்கள் முடிந்த நிலையில் அவசர நிலை பிரகடனம் இன்று விலக்கிக் கொள்ளப்படுவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. சட்டம் ஓழுங்கு நிலை முன்னேற்றம் ஏற்படும் வகையில் அவசர நிலை விலக்கிக் கொள்ளப்படுவதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

5) முன்னாள் உலக செஸ் சாம்பியனுக்கு உளவாளி பட்டம் குத்திய ரஷியா

ரஷியாவின் செயல்பாடுகளை அந்நாட்டை சேர்ந்த முன்னாள் உலக செஸ் சாம்பியன் கேரி கேஸ்பரோவ், முன்னாள் எண்ணெய் அதிபர் மிகெயில் கோதோர்வ்ஸ்கி ஆகியோர் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். இதையடுத்து ரஷிய நீதித்துறை அமைச்சகம், அவர்களை, ‘வெளிநாட்டு உளவாளிகள்’ என்ற பட்டியலில் சேர்த்துள்ளது. உக்ரைன் மற்றும் மனித உரிமைகள் அறக்கட்டளைகள் மூலம் அவர்களுக்கு நிதி வருவதாக ரஷியா தெரிவித்துள்ளது.

Also Read: காதல் திருமணம் செய்த இளைஞர் நடுரோட்டில் குத்தி கொலை.. ஒரே மாத்தில் பதைபதைக்கும் 2 ஆணவக் கொலைகள்!