உலகம்

ட்விட்டர் வாங்கும் முடிவை தள்ளிவைத்த எலான் மஸ்க்.. குழப்பத்தில் பயனர்கள்: காரணம் என்ன?

1) புதிய அரசு அமைந்தாலும் இலங்கையில் நீடிக்கிறது போராட்டம்!

இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றுக்கொண்டார். ஒருங்கிணைந்த அரசை அமைக்கும் பணியில் விக்ரமசிங்கே ஈடுபட்டுள்ள நிலையில், அரசுக்கு எதிராக போராடும் போராட்டக்காரர்கள் தங்கள் போராட்டத்தை கைவிடப் போவது இல்லை என்று அறிவித்துள்ளனர். கொழும்பு நகர வீதிகளில் பதாகைகளை ஏந்தியபடி அரசுக்கு எதிராக பலர் போராடியதை காண முடிந்தது. இலங்கையில் புதிய அரசு அமைந்தாலும் போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.

2) சந்திர மண்ணில் வளர்ந்த செடிகள்!

அப்பல்லோ விண்கலம் பூமிக்கு அனுப்பிய சந்திரனில் இருந்து கிடைத்த மண் மாதிரிகளை கொண்டு செடிகளை வளர்ப்பது என விஞ்ஞானிகள் முடிவு செய்தனர். இதன்படி, அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் மற்றும் புளோரிடா பல்கலை கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் இணைந்து இதற்கான பணிகளில் இறங்கினர். ஒவ்வொரு செடிக்கும் ஒரு கிராம் அளவுள்ள சந்திரனின் மண்ணை ஆய்வு குழுவினர் ஒதுக்கியுள்ளனர். அதனுடன், நீர் மற்றும் செடிகளின் விதைகளை சேர்த்து உள்ளனர். அதன்பின்பு, தூய்மையான அறை ஒன்றில் அவற்றை சீலிடப்பட்ட கண்ணாடி பெட்டிகளில் வைத்து உள்ளனர். ஊட்டச்சத்து குறைவான மண் என்பதனால், தினசரி ஒரு திரவம் சேர்க்கப்பட்டு வந்துள்ளது. 2 நாள் கழித்து கவனித்தபோது, விதைகள் முளைத்து இருந்தன. இதனை கண்டு ஆய்வில் ஈடுபட்டு இருந்த ஆராய்ச்சியாளர்கள் ஆச்சரியம் அடைந்தனர்.

3) கராச்சியில் குண்டு வெடிப்பு!

பாகிஸ்தான் கராச்சியில் எப்போதும் பிசியாக காணப்படும் சத்தார் மார்க்கெட் பகுதியில் நேற்று இரவு சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் 13 பேர் காயமடைந்துள்ளனர். ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், காயமடைந்தோரில் சிலர் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர். குண்டு வெடிப்பின்போது அருகில் இருந்த பல வாகனங்கள் மற்றும் கட்டிடங்களின் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளன. இதில் அரசு அதிகாரிகள் இருவர் காயமடைந்துள்ளதாக டிஐஜி சார்ஜீல் கரல் தெரிவித்துள்ளார்.

4) பூமி மீது மோத வரும் ராட்சத விண்கல்?

பூமி மீது விண்ணில் சுற்றித் திரியும் ராட்சத விண்கல் ஒன்று மோத வாய்ப்புள்ளதாக நாசா விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 3889945 என்கிற ராட்சத விண்கல் பூமியின் மிக அருகில் (2.5 மில்லியன் மைல்) கடந்து செல்ல உள்ளது. அமெரிக்காவின் எம்பயர் ஸ்டேட் கட்டிடம், பிரான்ஸின் ஈபிள் டவர் ஆகியவற்றை விட அதிக விட்டம் கொண்ட இந்த பிரம்மாண்ட விண் கல்லானது பல ஆண்டு காலமாக பூமியின் சுற்றுவட்டப் பாதைக்கு அருகே கடந்து பூமியை அச்சுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது இந்த விண்கல் பூமிக்கு மிக அருகில் செல்வது வாடிக்கை. இந்த 2022ஆம் ஆண்டை அடுத்து 2063 ஆம் ஆண்டு மீண்டும் இந்த விண்கல் பூமிக்கு மிக அருகில் கடந்து செல்லும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

5) எலான் மஸ்க் திடீர் அறிவிப்பு!

உலகின் நம்பர் ஒன் பணக்காரர் ஆன எலான் மஸ்க், அண்மையில் ட்விட்டர் தளத்தை வாங்குவது உறுதியானது. தற்போது அதற்கான பணிகளை அவர் மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில், இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். போலி கணக்குகள் குறித்த விவரங்கள் நிலுவையில் இருப்பதால் ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக எலான் மஸ்க் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

Also Read: நீங்கள் பாசிஸ்ட்டா என்பதை ’ஜன கண மன’ படம் சொல்லும்.. படத்தின் கதை இதுதான்!