உலகம்

5in1_World | பிரிட்டனில் பரவும் புதுவகை நோய்த்தொற்று.. சவுதி மன்னன் சல்மான் மருத்துவமனையில் அனுமதி!

1) பிரிட்டன் நபருக்கு 'மங்கிபாக்ஸ்' தொற்று

விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு பரவும், 'மங்கி பாக்ஸ்' எனப்படும் ஒருவித அம்மை நோய் தொற்று, பிரிட்டனைச் சேர்ந்த ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. நைஜீரியாவில் இருந்து, பிரிட்டனுக்கு திரும்பிய நபருக்கு சமீபத்தில் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இவரை பரிசோதித்தபோது, 'மங்கிபாக்ஸ்' எனப்படும் ஒருவித அரிய வகை அம்மை நோய் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. அவர், லண்டனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

2) 26 முறை எவரெஸ்ட்டில் ஏறிய பழங்குடி நபர் சாதனை!

நேபாளத்தில் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த 52 வயதான நபர் உலகின் மிகப்பெரிய மலைச் சிகரமான எவரெஸ்ட்டில் 26வது முறையாக ஏறி சாதனை படைத்துள்ளார். உலகின் மிக உயரமான மலைச் சிகரமான எவரெஸ்ட்டில் ஏற 316 பேருக்கு நேபாள அரசு இந்த ஆண்டு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் கமி ரீட்டா என்பவர் எவரெஸ்ட் மலைச் சிகரத்தில் 26வது முறையாக ஏறி தன் பழைய சாதனையை முறியடித்துள்ளார். இவர் 'ஷெர்பா' எனப்படும் இமயமலைப் பகுதிகளில் வாழும் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர். கமி ரீட்டா உட்பட 11 பேர் அடங்கிய குழு நேற்று முன்தினம் 8,848 மீட்டர் உயரமான எவரெஸ்ட் மலைச் சிகரத்தின் உச்சியை அடைந்தனர்.

3) இங்கிலாந்து யூடியூபர் கைது!

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர், யூடியூபர் பெஞ்சமின் ரிச். இவர் கஜகஸ்தானில் ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள விண்வெளி மையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இவர் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது பற்றி விசாரணை நடத்தப்படுவதாக இங்கிலாந்து வெளியுறவு அமைச்சகம் கூறுகிறது. பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த அலினா செலியுபா என்ற பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளார்.

4) 10 லட்சம் அகதிகளை சிரியாவுக்கே அனுப்ப துருக்கி திட்டம்

துருக்கியில் சிரியாவை சேர்ந்த 37 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அகதிகளாக வசித்து வருகின்றனர். துருக்கியின் பொருளாதாரம், கலாசாரம், பண்பாடு, மொழி, பழக்கவழக்கம் என அனைத்தையும் சிரியாவில் இருந்து வந்த அகதிகள் ஆக்கிரமித்து அழித்து வருவதாக துருக்கியில் எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.

மேலும், துருக்கி மக்களிடையே சிரிய அகதிகள் மீதான வெறுப்புணர்வும் அதிகரித்து வருகிறது. இதனை தொடர்ந்து தங்கள் நாட்டில் உள்ள அகதிகளை மீண்டும் சிரியாவுக்கே அனுப்பும் நடவடிக்கையை துருக்கி அதிபர் எர்டோகன் தலைமையிலான அரசு தீவிரப்படுத்தியுள்ளது. ஏற்கனவே 5 லட்சம் அகதிகள் சிரியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக துருக்கி அரசு தெரிவித்துள்ளது.

5) சவுதி அரேபிய மன்னர் சல்மான் மருத்துவமனையில் அனுமதி

சவுதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துல் அஜிஸ் அல் சாத், செங்கடல் நகரமான ஜெட்டாவில் உள்ள மன்னர் பைசல் சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் மருத்துவ பரிசோதனைகளுக்காக சேர்க்கப்பட்டுள்ளதாக அரண்மனை அறிக்கையை மேற்கோள்காட்டி சவுதி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இவருக்கு கடந்த 2020-ம் ஆண்டு பித்தப்பை அறுவை சிகிச்சை செய்யப்பட்டதும், மார்ச் மாதம் அவரது இதய பேஸ்மேக்கரில் பேட்டரி மாற்றப்பட்டதும் என்பது குறிப்பிடத்தக்கது.