உலகம்

ட்விட்டரை வாங்கிவிட்டு டெஸ்லாவின் பங்கு விற்பனை.. எலான் மஸ்க்கின் திட்டம் என்ன? #5IN1_WORLD

1) உக்ரைனில் 'ரூபிள்’ பணத்தை அறிமுகம் செய்த ரஷியா திட்டம்!

உக்ரைனில் கைப்பற்றப்பட்ட பகுதியில் அதிகாரப்பூர்வ பணமாக ரூபிள் அறிமுகப்படுத்தப்படும் என ரஷியா அறிவித்துள்ளது. முன்னதாக, போர் தொடங்கியபோது உக்ரைனின் பகுதிகளை கைப்பற்றுவது நோக்கம் அல்ல, உக்ரைனின் ராணுவ பலத்தை அழிப்பது மட்டுமே நோக்கம் என ரஷியா அறிவித்திருந்த நிலையில் தற்போது கைப்பற்றிய பகுதிகளில் தங்கள் நாட்டு பணத்தை அறிமுகப்படுத்தியுள்ளதன் மூலம் போரில் கைப்பற்றிய உக்ரைனின் பகுதிகளை முழுவதும் தங்கள் ஆளுகைக்கு கீழ் கொண்டுவர ரஷியா திட்டமிட்டுள்ளது என்பது உறுதியாகியுள்ளது.

2) டெஸ்லா நிறுவனத்தின் 44 லட்சம் பங்குகளை விற்ற எலான் மஸ்க்!

எலான் மஸ்க் தனது மின்சார கார் நிறுவனமான டெஸ்லாவின் 44 லட்சம் பங்குகளை விற்பனை செய்துள்ளார். இவற்றின் மதிப்பு 4 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். ட்விட்டர் ஊடக நிறுவனத்தை வாங்கும் பேரத்தை முடிப்பதற்காகவே இவர் தனது டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் தான் இனி தனது கம்பெனியின் பங்குகளை விற்பதாக இல்லை என்று டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

3) தலீபான்களுக்கு எதிராக புதிய போர் தொடங்கப்படும்!

ஆப்கானிஸ்தானில் தலீபான்களுக்கு எதிராக புதிய போர் தொடங்கப்படும் என்று முன்னாள் ராணுவ தளபதி சூளுரைத்துள்ளார். இங்கிலாந்து தலைநகர் லண்டனில் தஞ்சமடைந்துள்ள ஆப்கானிஸ்தானின் முன்னாள் ராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சாமி சதாத், தலீபான்களுக்கு எதிராக புதிய போர் தொடங்கப்படும் என சூளுரைத்துள்ளார். முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் அரசியல்வாதிகளுடன் சேர்ந்து போருக்கு தயாராகி வருவதாகவும், அடுத்த மாதம் ரம்ஜான் பண்டிகைக்கு பிறகு போர் தொடங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

4) 37 ஆயிரம் அடி உயரத்தில் விமானத்தில் திருமணம்!

விமானத்தில் எதிர்பாராத வகையில் ஒரு தம்பதிக்கு 37 ஆயிரம் அடி உயரத்தில் திருமணம் நடந்துள்ளது. அமெரிக்காவின் ஒக்லஹோமா மாகாணத்தில் வசித்து வருபவர்கள் ஜெரேமி சால்டா மற்றும் பாம் பேட்டர்சன். இவர்கள், உலகின் திருமண நகரம் என பெயர் பெற்ற லாஸ் வேகாஸ் நகரில் கடந்த 24ந்தேதி தங்களது திருமணம் நடைபெற வேண்டும் என விரும்பியுள்ளனர். அதற்காக தயாராகி வந்துள்ளனர். ஆனால், குறிப்பிட்ட நாளில் லாஸ் வேகாஸ் செல்லும் அமெரிக்க ஏர்லைன்ஸ் விமானம் ரத்து செய்யப்பட்டதால் மற்றொரு விமானத்தில் நடுவானில் 37 ஆயிரம் அடி உயரத்தில் இந்த தம்பதியின் திருமணம் இனிதே நடந்து முடிந்தது. இந்த பதிவை சவுத்வெஸ்ட் விமான நிறுவனம் பகிர்ந்துள்ளது.

5) யூரோவை பயன்படுத்தும் நாடுகளில் பணவீக்கம் 7.5 சதவீதமாக அதிகரிப்பு!

யூரோவை நாணயமாக பயன்படுத்தும் 19 நாடுகளில் பணவீக்கம் கடுமையாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் ரஷியா போர் காரணமாக எரிபொருள் விலை உயர்ந்துள்ளதால் ஆண்டு பணவீக்கம் இந்த மாதம் 7.5 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இதையடுத்து ஐரோப்பிய நாடுகளில் எரிசக்திகளின் விலை 38 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் 34.3 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐரோப்பா பண வீக்கம் அமெரிக்க ஆண்டு பணவீக்கத்திலும் எதிரொலித்துள்ளது. இந்த பணவீக்கத்தின் காரணமாக ஐரோப்பிய மத்திய வங்கி வட்டி விகிதங்களை உயர்த்துவதற்கு ஆலோசனை செய்து வருகிறது.

Also Read: “இதையும் வாங்குங்க” - எலான் மஸ்க்கிற்கு குஜராத் அணி வீரரின் கோரிக்கை.. கலாய்த்துத் தள்ளும் நெட்டிசன்கள்!