உலகம்

காலியான அமைச்சரவை.. பதவியேற்ற 24 மணி நேரத்தில் நிதியமைச்சர் ராஜினாமா - என்ன நடக்கிறது இலங்கையில்?

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில் மக்கள் தெருக்களில் இறங்கி போராடத் தொடங்கியுள்ளனர். ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே பதவி விலகவேண்டு மென்ற கோரிக்கை வலுத்துவருகிறது. இந்த நிலையில் இலங்கையில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. வியாழக்கிழமை முதல் மக்கள் இலங்கையில் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அரசாங்கத்திற்கு எதிராக பதாகைகளை ஏந்தி, ராஜபக்சே-வே “வீட்டிற்குச் செல்லுங்கள்” என்று முழக்கங்களை எழுப்பினர். இதற்கிடையில் போராட்டக்காரர்களில் சிலர் வன்முறையில் ஈடுபட்டதால் கலகத் தடுப்பு காவல்துறையினர் அப்பகுதிக்கு கண்ணீர்ப்புகை மற்றும் தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் வாகனங்களை கொண்டுவந்தனர். இலங்கை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சேவின் வீட்டிற்கு வெளியே நூற்றுக்கணக்கான மக்கள் போராட்டம் நடத்தினர்.

மேலும் இன்று பேஸ்புக், யூடியூப் போன்ற சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டது. பிறகு மீண்டும் இணையச் சேவைகள் தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நேற்று மாலை 6 மணி முதல் திங்கள்கிழமை காலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இலங்கையில் மக்கள் போராட்டம் வெடித்துவரும் நிலையில் இலங்கை அமைச்சரவை கூண்டோடு ராஜினாமா செய்தது.

குறிப்பாக, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அமைச்சரவையில் உள்ள 26 அமைச்சர்கள் மொத்தமாக தங்களுடைய பதவியில் இருந்து விலகியுள்ளனர். அதேவேளையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது சகோதரரும் ஜனாதிபதியுமான கோத்தபய ராஜபக்ஷ தொடர்ந்து பதவியில் நீடிக்கிறார்கள்.

இதனிடையே, நான்கு புதிய அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த புதிய அமைச்சரவையில் நிதியமைச்சர் பொறுப்பு அலி சப்ரியிடமும், கல்வித்துறை தினேஷ் குணவர்த்தனவிடமும், வெளியுறவுத்துறை ஜீ.எல் பீரிஸிடமும், நெடுஞ்சாலைத்துறை ஜோன்ஸ்டன் ஃபெர்னாண்டோவிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் போராட்டம் நீடித்து வந்த நிலையில், எதிர்க்கட்சிகளுக்கு அமைச்சரவையில் இணைய அழைப்பு விடுக்கப்பட்டது. அவற்றை எதிர்கட்சியினர் நிராகரித்த நிலையில், இலங்கை நிதியமைச்சராக பொறுப்பு ஏற்ற 24 மணிநேரத்தில் தனது பதிவியை அலி சப்ரி ராஜினாமா செய்துள்ளார். அலி சாப்ரின் இந்த நடவடிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை.. வீதியில் இறங்கிய மக்கள் : அங்கு நடப்பது என்ன ?