உலகம்

ட்விட்டர் நிறுவனத்தின் பங்குகளை வாங்கிய எலான் மஸ்க்.. படகு கவிழ்ந்து 90 பேர் பலி! #5IN1_WORLD

லிபியாவில் நடுக்கடலில் படகு கவிழ்ந்து 90 பேர் பலி!

லிபியா நாட்டில் வறுமை காரணமாக பொதுமக்கள் அங்கிருந்து வெளியேறி ஜரோப்பிய நாடுகளில் தஞ்சம் அடைகின்றனர். இதற்காக அவர்கள் திருட்டுத்தனமாக கடல் வழியாக படகுகளில் செல்கின்றனர். லிபியாவில் இருந்து சுமார் 100 பேர் ஒரு படகில் ஜரோப்பிய நாடுகளுக்குச் சென்று கொண்டிருந்தனர். நடுக்கடலில் சென்று கொண்டிருந்தபோது திடீரென படகில் எந்திர கோளாறு ஏற்பட்டதால் அந்தப் படகு நடுக்கடலில் நின்றது. 4 நாட்கள் கடலில் தவித்த அதில் இருந்தவர்கள் உயிர் பிழைப்பதற்காக படகில் இருந்து கடலில் குதித்ததில் அந்தப் படகு அப்படியே கவிழ்ந்தது. இதனால் அதில் சிக்கி கொண்டவர்கள் உயிருக்காக போராடினார்கள். இதுபற்றி தகவலறிந்த மீட்புப் படையினர் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதில் ஒரு சிலரை மட்டுமே அவர்கள் மீட்டனர். 90 பேர் கடலில் மூழ்கி இறந்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

ட்விட்டர் நிறுவனத்தின் 9.2% பங்குகளை வாங்கிய எலான் மஸ்க்!

உலகின் மிகப்பெரும் பணக்காரர்களில் ஒருவரும் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் அதிபருமான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை வாங்கியுள்ளார். இதுதொடர்பாக அமெரிக்க பங்குச்சந்தை ஒழுங்கு முறை அமைப்பிற்கு அளித்த அறிக்கையில் ட்விட்டர் நிறுவனத்தின் 7 கோடியே 34 லட்சம் ட்விட்டர் பங்குகள் வாங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ட்விட்டரின் மிகப்பெரிய பங்குதாரராகிறார் எலான் மஸ்க். ட்விட்டர் பங்குகளை எலான் மஸ்க் வாங்கியதையடுத்து ட்விட்டர் நிறுவனத்தின் வர்த்தகம் 26% உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மொயீத் யூசுப் ராஜினாமா!

பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மெயீத் யூசுப் நேற்று திடீர் ராஜினமா செய்தார். பாகிஸ்தான் பாராளுமன்றம் கலைக்கப்பட்ட பிறகு பாகிஸ்தான் இடைக்கால பிரதமராக உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி குல்சார் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், நேற்று பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மொயீத் யூசுப் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதுபற்றி அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் “தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நாட்டிற்கு எனது பங்களிப்பிற்கு அனுமதி அளித்த பிரதமர் இம்ரான் கானுக்கு நன்றி” என தெரிவித்துள்ளார்.

எரிபொருள் வாங்குவதை நிறுத்த முடியாது - ஜெர்மனி

ரஷியாவிடமிருந்து எரிபொருள் வாங்குவதை தற்போதைக்கு நிறுத்த முடியாது என்று ஜெர்மனி தெரிவித்துள்ளது. ஜெர்மனியின் 55 சதவீத இயற்கை எரிவாயு தேவையில் 34 சதவீத கச்சா எண்ணெய் தேவையை ரஷியா பூர்த்தி செய்கிறது. சமீபத்தில் தங்களிடமிருந்து எரிவாயு, கச்சா எண்ணெய் வாங்கும் நட்பு வட்டத்தில் இல்லாத நாடுகள் தங்கள் நாட்டு பணமான ரூபெல்லில் தான் வாங்க வேண்டும் என ரஷியா அதிரடியாக அறிவித்தது. ரூபெல்லில் வாங்கவில்லை என்றால் ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பி வரும் கச்சா எண்ணெய், எரிவாயுவை நிறுத்துவோம் என எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.

புதினுக்கு எதிராக போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும்- ஜோ பைடன் வலியுறுத்தல்!

உக்ரைன் மீது ரஷிய ராணுவம் நடத்தி வரும் தாக்குதல்களில் ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். குறிப்பாக புச்சா நகரில் கொத்துக்கொத்தாக மக்கள் இறந்து கிடந்தது உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ரஷ்ய அதிபர் புதின் போர்க் குற்றம் புரிந்திருப்பதாக பல்வேறு தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில், ரஷ்ய அதிபர் புதினுக்கு எதிராக போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பு விடுத்துள்ளார்.

Also Read: “ஆத்தீ.. உங்க சங்காத்தமே வேணாம்” : சீனாவைக் கண்டு அலறும் நேபாளம்! #5in1_World