உலகம்

நெருக்கடியைச் சமாளிக்க முடியாமல் திணறும் இலங்கை.. மகிந்த ராஜபக்சே ராஜினாமா?: வலுவடையும் மக்கள் போராட்டம்!

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் வரலாறு காணாதவகையில், விலை வாசிகள் உயர்ந்து வருகிறது. மேலும் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிவாயு பொருட்களுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

அதேபோல் தினமும் 13 மணி நேரம் மின் வெட்டி ஏற்பட்டு வருகிறது. இப்படி இலங்கை மக்கள் பெரும் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். இந்நிலைக்குக் காரணமாக உள்ள அதிபர் கோத்த பயராஜபக்சே பதவி விலக வேண்டும் என கோரி அந்நாட்டு மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனால் இலங்கை முழுவதும் அவசர நிலை பிரகடனம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று பேஸ்புக், யூடியூப் போன்ற சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டது. பிறகு மீண்டும் இணையச் சேவைகள் தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நேற்று மாலை 6 மணி முதல் திங்கள்கிழமை காலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே பொருளாதார நெருக்கடி அதிகரித்துள்ள நிலையில் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தனது ராஜினாமா கடிதத்தை இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜப்க்சாவிடம் மகிந்த ராஜபக்சே வழங்கினார்.

ஆனால், மகிந்த ராஜபக்ச அளித்த ராஜினாமா கடிதத்தை ஏற்க இலங்கை அதிபர் கோட்டாபய ராஜப்க்சா மறுப்பு தெரிவித்துள்ளார். இதுமட்டுமின்றி இலங்கை அரசிலிருந்து விலகுவதாகச் சுதந்திர கட்சியைச் சேர்ந்த 14 எம்.பிக்கள் அறிவித்துள்ளனர்.

Also Read: கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை.. வீதியில் இறங்கிய மக்கள் : அங்கு நடப்பது என்ன ?