உலகம்

“வீடு இருக்கும்.. ஆனா கண்ணுக்குத் தெரியாது” : தெருவில் போவோரை அசரவைக்கும் அதிசய வீடு! #5in1_World

1. கண்ணுக்கு தெரியாத வீடு - லண்டனில் அதிசயம்!

லண்டனில், கண்ணுக்குத் தெரியாதபடி கண்ணாடிகளை வைத்து வீடு ஒன்று கட்டப்பட்டுள்ளது. பிரிட்டன் தலைநகர் லண்டனின் ரிச்மாண்ட் பகுதியில் கட்டப்பட்டுள்ள இந்த வீடு முற்றிலும் கண்ணாடிகளை வைத்து, இருக்கும் இடம் தெரியாதபடி வடிவமைக்கப்பட்டு அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. இந்த வீடு, 2015ஆம் ஆண்டிற்கு முன்பு வரை, சாதாரண வீடாகவே இருந்துள்ளது. பின்பு, கட்டடக்கலை நிபுணர் அலெக்ஸ் ஹா என்பவர், இந்த வீட்டை கண்ணாடிகளை வைத்து மறுவடிவமைத்துள்ளார். இந்த கண்ணாடி வீட்டின் புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

2) மிலி சைரஸ் சென்ற விமானத்தை மின்னல் தாக்கியது

பிரபல பாப் நட்சத்திரம் மிலி சைரஸ் சென்ற விமானத்தை மின்னல் தாக்கியதால் அவசரமாக தரையிறக்கப்பட்டது. மிலி சைரஸ் தனது குழுவினர், இசைக்குழு, நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பராகுவேக்கு தனியார் விமானம் ஒன்றில் பயணம் மேற்கொண்டார். அங்கு அசுன்சியோனிகோ நகரில் இசை நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டிருந்தார். நடுவானில் விமானத்தை மின்னல் தாக்கியதால் அந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. மின்னல் தாக்கிய காட்சிகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

3) புதினின் ஆலோசகர் பதவி விலகல்; நாட்டைவிட்டு வெளியேறினார்

ரஷ்ய அதிபர் புதினின் ஆலோசகரான அன்டோலி சுபைஸ் தனது பதவியை ராஜினாமா செய்து, ரஷியாவிலிருந்தும் வெளியேறியுள்ளார். இவர், 1990-களில் ரஷியாவின் பொருளாதார சீர்திருத்தங்களை கட்டமைத்தவர்களில் முக்கியமானவராகக் கருதப்படுபவர். அண்மையில் மக்கள் முன்னிலையில் பேசிய ரஷ்ய அதிபர் புதின், ராணுவ நடவடிக்கையை விமர்சிப்பவர்கள் அனைவரும் தேசத்துரோகிகள் என கூறினார். இந்நிலையில் சுபைஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். முன்னதாக கடந்த வாரம் அர்காடி டிவோர்கோவிச் என்ற பொருளாதார மேதையும் ரஷியாவுக்கான ஆலோசனக் குழுவில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

4) சிரியா உடனான உறவை மேலும் விரிவாக்கம் செய்வதில் உறுதி: ஈரான்

ஈரானுக்கும் சிரியாவுக்கும் இடையிலான உறவு மிகச் சிறந்ததாக இருப்பதாக ஈரானிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடைடேயேயான உறவை பலப்படுத்த, அவர் சிரியாவுக்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார். போருக்குப் பிறகு அரபு நாடுகளுடன் தனது நல்லுறவை மேலும் வலுப்படுத்த சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத் முயற்சி செய்து வருகிறார். அதன் முன்னெடுப்பாக ஈரானுடனான தனது உறவை சிரியா வலுப்படுத்தி வருகிறது.

5) ரஷ்ய அதிபர் புதின் அதிரடி முடிவு!

ரஷ்யா விநியோகிக்கும் எரிவாயுவிற்கான கட்டணத்தை உலக நாடுகள் இனி ரஷ்ய நாட்டு பணமான ரூபிளில் திரும்பச்செலுத்த வேண்டும். டாலர் அல்லது யூரோ போன்ற வெளிநாட்டு பணத்தை பயன்படுத்தி கட்டணத்தை செலுத்தகூடாது என்று ரஷிய அதிபர் புதின் அதிரடியாக தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் கோபத்திற்கு ஆளாகியுள்ள அதன் மீது பொருளாதர தடைகள் விதித்த மேற்கத்திய நாடுகள் உள்ளிட்ட நாடுகளுக்கு இந்த முறை பொருந்தும். ரஷ்யாவின் நட்பு நாடுகள் பழைய முறையிலேயே கட்டணத்தை செலுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: #5in1_World : அமெரிக்காவின் முதல் கறுப்பின பெண் நீதிபதி - பழைய வீட்டில் கிடைத்த தங்கப் புதையல்!