உலகம்

ஹிட்லரிடம் இருந்து தப்பித்து புதினால் கொல்லப்பட்ட நபர்.. ஐ.நா உயர் பதவியில் இந்தியாவைச் சேர்ந்த பெண்..!

1) ஹிட்லரிடம் இருந்து தப்பித்து புதினால் கொல்லப்பட்ட நபர்!

நாஜி வதை முகாம்களில் இருந்து தப்பிய நபர் ரஷ்ய தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். உக்ரைன் நாட்டைச் சேர்ந்தவர் போரிஸ் ரோமன்சென்கோ. 96 வயதான போரிஸ், புச்சென்வால்ட், பீனெமுண்டே, மிட்டல்பாவ்-டோரா, பெர்கன்-பெல்சன் ஆகிய நான்கு நாஜி வதை முகாம்களில் இருந்து தப்பியவர். கடந்த வெள்ளிக்கிழமையன்று ரஷ்ய இராணுவத்தின் வெடிகுண்டு இவரது வீட்டில் விழுந்து இவர் உயிரிழந்தார். ஹிட்லரிடம் இருந்து உயிர் பிழைத்த இவர் தற்போது புதினால் கொல்லப்பட்டுள்ளார்.

2) ஐ.நா., உயர்மட்ட ஆலோசனை குழு உறுப்பினராக இந்தியர் நியமனம்!

ஐ.நா-வின் உயர்மட்ட ஆலோசனை குழு உறுப்பினராக இந்தியாவைச் சேர்ந்த பொருளாதார வல்லுனர் ஜெயதி கோஷ் நியமிக்கப்பட்டுள்ளார். சுவீடன் முன்னாள் பிரதமர் ஸ்டீபன் லோப்வன் உள்ளிட்டோர் தலைமையில் 12 பேர் அடங்கிய உயர்மட்டக் குழுவை ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டரஸ் அமைத்துள்ளார். ஜெயதி கோஷ் இதற்கு முன்பு ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில் பொருளாதார கல்வி மற்றும் திட்டப் பிரிவின் தலைவராக பணியாற்றியவர் ஆவார்.

3) இலங்கைக்கு 2.5 பில்லியன் டாலர் கடன் வழங்குகிறது சீனா

இலங்கை இதுவரை இல்லாத வகையில் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. இந்நிலையில், இலங்கைக்கு 2.5 பில்லியன் டாலர் கடன் மற்றும் வர்த்தகக் கடன் வழங்குவது குறித்து, சீனா பரிசீலித்து வருவதாக கொழும்பில் உள்ள சீன தூதர் கி ஜென்ஹாங் கூறி உள்ளார்.

4) ஆப்கானிஸ்தானில் அனைத்து வகுப்பு மாணவிகளும் பள்ளிகளுக்கு செல்ல அனுமதி

ஆப்கானிஸ்தானில் அனைத்து வகுப்பு மாணவிகளும் பள்ளிகளுக்கு செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தலிபான்கள் மீண்டும் ஆட்சி பொறுப்புக்கு வந்தபின், 6ம் வகுப்புக்கு மேல் பெண் குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஆப்கானிஸ்தான் சுகாதார மற்றும் கல்வி அமைச்சகங்களிலும் பெண்கள் பணிபுரியவும், காபூல் சர்வதேச விமான நிலையத்திலும் பெண்கள் பணிபுரியவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

5) சீன விமான விபத்தில் அனைத்து பயணிகளும் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம்

சீனாவின் போயிங் 737 ரக விமானம் நேற்று குவாங்சி மாகாணத்தில் உள்ள மலைபகுதியின் மேல் 31 ஆயிரம் அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக விமானம் கீழே விழுந்து நொருங்கியது. விமானத்தில் பயணித்த அனைவரும் இறந்திருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. விமானம் விழுந்த பகுதியில் காட்டுத்தீ பரவியிருப்பதால், மீட்புப்பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Also Read: #5in1_World : அமெரிக்காவின் முதல் கறுப்பின பெண் நீதிபதி - பழைய வீட்டில் கிடைத்த தங்கப் புதையல்!