உலகம்
பெரும் அழிவைச் சந்திக்கும் உலகின் மிகப்பெரிய ‘காடு’ : உலக வன நாளில் அறிந்துகொள்ள வேண்டிய முக்கிய செய்தி!
உலகளவில் மிகப்பெரிய காட்டுப் பகுதியான அமேசான் காடுகளில் அரிய வகை மரங்கள், மூலிகைச் செடிகள், அரிய வகை விலங்குகள், பறவைகள் என பலவகை உயிரினங்கள் உள்ளன. அமேசான் காடுகளின் பெரும்பகுதி பிரேசிலிலும், கொலம்பியா, வெனிசுலா, பொலிவியா, கயானா, பிரெஞ்ச் கயானா உள்ளிட்ட நாடுகளிலும் அமைந்துள்ளது.
அமேசான் மழைக்காடுகள்தான் புவி வெப்பமடைதலைக் கட்டுப்படுத்துவதில் பெரும் பங்கினை வகிக்கிறது. ஆனால், இந்தக் காடுகளில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு கடந்தாண்டு மட்டும் அதிக முறை காட்டுத்தீ உருவாகியுள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் வேதனை தெரிவித்திருந்தனர்.
குறிப்பாக கடந்த 3 ஆண்டுகளில் அமேசான் மழைக்காடுகளில் 72 ஆயிரத்து 843 முறை காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இது முன்பு ஏற்பட்ட காட்டுத்தீயின் எண்ணிக்கையை விட 83 சதவீதம் அதிகம் எனக் கூறப்படுகிறது. இந்த காட்டுத்தீயினால் உயிரினங்கள் பல அழிந்துள்ளதாகவும், உயிர்க்கோளத்தின் மறுசுழற்றியே சிதைந்துபோகும் அபாயத்தை எட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
உலக வன நாள் கடைபிடிக்கப்படும் இந்நாளில் பிரேசிலின் அமேசான் காடுகள் அழிந்து வருவது உலக நாடுகளுக்கு எச்சரிக்கை செய்தியாக அமைந்துள்ளது. அதுமட்டுமல்லாது, அமேசான் காடழிப்பு குறித்த அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது. புரோடெஸ் என்ற தேசிய கண்காணிப்பு மையம் சமீபத்தில் ஆய்வு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், காட்டு வளம் பற்றிய தங்கள் ஆய்வுக்கு ஆகஸ்ட் 2020 முதல் ஜூலை 2021 வரையிலான காலகட்டத்தை எடுத்துக்கொண்டது. இந்தக் காலகட்டத்தில் 22 சதவிகிதம் அழிவு அதிகமாக ஏற்பட்டிருப்பதாகத் தெரியவந்தது. இது 2006ஆம் ஆண்டுக்குப் பிறகு, அதாவது 15 ஆண்டுகளில், ஏற்பட்டுள்ள பெரும் அழிவு என்று தெரிகிறது எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அமேசானில் உள்ள மழைக்காடுகளில் 13,235 சதுர கி.மீட்டரை பூமி இழந்திருக்கிறது. இதுவரை எந்த ஆண்டிலும் 10,000 ச.கி.மீக்கு மேல் அழிவு ஏற்பட்டதில்லை. காட்டு வளம் அழிவது பற்றி மேற்கொள்ளப்பட்ட சில முதற்கட்ட ஆய்வுகள் நிலைமை படுமோசமாகியிருப்பதைக் காட்டுகின்றன.
கடந்த மூன்று ஆண்டுகளில் அழிக்கப்பட்ட காட்டு வளத்தின் சராசரி பெரும் அளவில் அதிகரித்திருக்கிறது. இது முதற்கட்ட ஆய்வுத் தகவல் என்றாலும், இறுதிக்கட்ட ஆய்வறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில்தான் அமையும் என்று சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
Also Read
-
“தவெக ஆட்சிக்கு வந்து 3 மாதம் ஆச்சு.. ஒரு திட்டமும் இல்லை.. நிதியும் ஒதுக்கல” : கே.என்.நேரு காட்டம்!
-
குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி திட்டம் கைவிட்டது ஏன்? : பேரவையில் உதயநிதி ஸ்டாலின் கேள்வி!
-
திமுக ஆட்சி தொடர்ந்தால் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார இலக்கை அடைந்திருப்போம் - ஆஸ்டின் பதிலடி!
-
”இந்த திட்டத்தில் கை வைத்தால் த.வெ.க அரசின் கதை முடிந்தது” - CPM செயலாளர் பெ.சண்முகம் எச்சரிக்கை!
-
பொய்யிலே பிறந்து... பொய்யிலே புரண்டு... : விஜயின் பொய்களை வெளிச்சம் போட்டு காட்டும் முரசொலி!