உலகம்

பன்றியின் இதயம் பொருத்தப்பட்டவர் இரண்டே மாதத்தில் இறப்பு; அதிர்ச்சியில் மருத்துவ உலகம்!

உலகிலேயே முதல்முறையாக மனிதர் ஒருவருக்குப் பன்றியின் இதயம் வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் ஒரு புதிய மைல்கல்லை மருத்துவ உலகம் எட்டியிருந்தது. ஆனால் அந்த சாதனை இரண்டு மாதங்களுக்கு கூட நீடிக்காமல் போயுள்ளது.

ஆம், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் இதயம் பொறுத்தப்பட்ட அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் பென்னட் என்ற முதியவர் தற்போது உயிரோடு இல்லை.

மேரிலாண்ட் மாகாணத்தைச் சேர்ந்த டேவிட் பென்னட்டிற்கு (57) கடந்த ஜனவரி மாதம் இதய மாற்று அறுவை சிகிச்சை சுமார் 7 மணிநேரத்துக்கு மேலாக நடத்தப்பட்டது. அதன் பிறகு மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்து வந்தார்.

இந்த அறுவை சிகிச்சைக்குக் குறித்து மருத்துவர் பார்ட்லி க்ரிபித் கூறுகையில், "இந்த அறுவை சிகிச்சை மாற்று உறுப்பு பற்றாக்குறை நெருக்கடியைத் தீர்ப்பதற்கு இதுபோன்ற சாதனைகள் பயன்படும்.

பன்றியின் உறுப்புகளை மனித உடம்பு ஏற்காமல் போவதற்குக் காரணமாக இருக்கும் மூன்று மரபணுக்களைப் பன்றியின் உடலிலிருந்து மருத்துவர்கள் நீக்கியுள்ளனர்.

பன்றியின் இதய திசுவை தேவைக்கு மேல் வளரச் செய்யும் மரபணுவையும் மருத்துவர்கள் நீக்கியுள்ளதோடு, பன்றியின் உறுப்பை மனித உடல் ஏற்பதற்காக, ஆறு மனித மரபணுக்களை பன்றியின் உடலில் செலுத்தியுள்ளனர். அதன்பிறகே பன்றியின் இதயம் டேவிட் பென்னடுக்கு பொருத்தப்பட்டுள்ளது" எனத் தெரிவித்திருந்தார்.

இப்படி இருக்கையில், சரியாக இரண்டு மாதங்களுக்கு பன்றியின் இதயம் பொறுத்தப்பட்ட டேவிட் பென்னட் மார்ச் 8ம் தேதி உயிரிழந்துவிட்டார் என்ற செய்தி அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.

டேவிட் பென்னட்டின் இறப்புக்கான உரிய காரணத்தை இதுவரையில் மருத்துவர்கள் தரப்பில் இருந்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Also Read: உலகிலேயே முதல் முறையாக பன்றியின் இதயத்தை மனிதனுக்குப் பொருத்தி சாதனை... ஆச்சரியத்தில் மருத்துவ உலகம்!