உலகம்

’பாட்டி வாழ்ந்த மண்’.. உக்ரைனுக்கு 75 கோடி நிதி வழங்கிய பிரபல ஹாலிவுட் நடிகர்!

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து இரண்டாவது வாரமாகத் தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களான கீவ், கார்கிவ் ஆகிய பகுதிகளைக் குறிவைத்து ரஷ்யா தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது.

இருப்பினும் பலம் படைத்த ரஷ்ய ராணுவத்தை, உக்ரைன் ராணும் தடுத்து நிறுத்தி எதிர்த்தாக்குதல் நடத்தி வருகிறது. எளிதில் உக்ரைன் மடிந்துவிடும் என நினைத்த ரஷ்யாவிற்கு தற்போது சவால் மிகுந்ததாக இந்தப் போர் மாற்றமடைந்துள்ளது.

இந்தப்போரால் ரஷ்யாவைக் காட்டிலும் உக்ரைன் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. 15 லட்சத்திற்கும் மேற்பட்ட உக்ரைன் மக்கள் அண்டை நாடுகளில் அகதிகளாகத் தஞ்சமடைந்துள்ளனர். மேலும் கடுமையான பொருளாதார நெருக்கடியையும் சந்தித்துள்ளது.

அதேபோல், உக்ரைன் தலைநகராக கீவ் நகரில் உணவு கிடைப்பதிலேயே சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த மக்கள் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றனர். இதையடுத்து உலக வங்கி ரூ.5560 கோடி நிதியுதவி அளித்துள்ளது. அதேபோல் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் நிதி உதவி அளித்துள்ளன.

இந்நிலையில், ஹாலிவுட் நடிகர் லியானர்டோ டிகாப்ரியோ 10 மில்லியன் (இந்திய மதிப்பு படி 75 கோடி) நிதி உதவி வழங்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டிகாப்ரியோவின் பாட்டி உக்ரைனில் பிறந்தவர் என்பதால் இந்த உதவியைச் செய்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: ‘நிராகரித்த இந்தியா’.. உக்ரைன் ராணுவத்தில் இணைந்த தமிழ்நாட்டு மாணவர் : உளவுத்துறை விசாரணை !