உலகம்

போரில் ரஷ்ய தளபதி பலி.. நாளுக்கு நாள் ஓங்கும் உக்ரைனின் கை : அடுத்தடுத்து இழப்புகளைச் சந்திக்கும் ரஷ்யா!

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து இரண்டாவது வாரமாகத் தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களான கீவ், கார்கிவ் ஆகிய பகுதிகளைக் குறிவைத்து ரஷ்யா தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.

இருப்பினும் பலம் படைத்த ரஷ்ய ராணுவத்தை, உக்ரைன் ராணும் தடுத்து நிறுத்தி எதிர்த்தாக்குதல் நடத்தி வருகிறது. எளிதில் உக்ரைன் மடிந்துவிடும் என நினைத்த ரஷ்யாவிற்கு தற்போது சவால் மிகுந்ததாக இந்தப் போர் மாற்றமடைந்துள்ளது.

மேலும் விமானங்களைச் சுட்டு வீழ்த்தும் பலம் படைத்த ஆயுதங்களை அமெரிக்கா கொடுத்து உதவியுள்ளது. இதைக்கொண்டு ரஷ்யாவின் விமானங்களை தவிடுபொடியாக்கி வருகிறது உக்ரைன்.

அதேபோல், உக்ரைன் ராணுவத்தின் எதிர் தாக்குதலில் இதுவரை 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. உக்ரைன் தரப்பிலும் அதிகமான ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று கார்கிவ் நகரத்தில் நடந்த பயங்கர மோதலில் ரஷ்ய நாட்டின் 41வது இராணுவத்தின் முதல் துணைத் தளபதி விடாலி கெராஸிமோவை கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் உளவுத்துறை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

மேலும் மூத்த ரஷ்ய அதிகாரிகள் பலரும் உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே ரஷ்ய 7வது வான்வழிப் பிரிவின் தளபதி ஆண்ட்ரே சுகோவெட்ஸ்கி உக்ரைன் ராணுவத்தால் கொல்லப்பட்டுள்ளார்.

தற்போது மற்றொரு தளபதியும் கொல்லப்பட்டுள்ளது ரஷ்ய அரசுக்கு பெரிய அடிவிழுந்ததாகக் கருதப்படுகிறது. மேலும் எளிதில் உக்ரைன் சரணடைந்துவிடும் என நினைத்த ரஷ்யாவிற்கு இன்னும் வரக்கூடிய நாட்கள் கடும் சவாலாக இருக்கும் என்பதையே ரஷ்ய தளபதிகள் வீழ்த்தப்பட்டிருக்கும் நிகழ்வுகள் காட்டுகிறது.

Also Read: அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட 17 நாடுகளை 'Unfriend’ செய்த ரஷ்யா... காரணம் என்ன?