உலகம்

2வது நாளாக தொடரும் தாக்குதல் : “எங்களுக்கு வேற வழி இல்ல” : உலக நாடுகளின் எதிர்ப்பை புறந்தள்ளிய புதின்!

உலக நாடுகளின் எதிர்ப்பைப் புறந்தள்ளி உக்ரைன் மீது ரஷ்யா நேற்று தனது தாக்குதலை தொடங்கியது. உக்ரைனின் தலைநகரை முழுமையாக கைப்பற்றும் எண்ணத்துடன் படைகள் முன்னேறி வருகின்றன.

2வது நாளாக தொடரும் இந்த தாக்குதலில் இதுவரை 137 வீரர்கள் பலியாகி உள்ளனர். முதல் நாளில் மட்டும் 11 விமானப்படைத் தளங்கள் உட்பட 74 ராணுவ தளங்களை அழித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் நடவடிக்கைக்கு உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் ஏற்கனவே பொருளாதாரத் தடைகளை அறிவித்து வருகின்றன. இதனிடையே ரஷ்யாவின் பாதுகாப்பை உறுதி செய்ய உக்ரைன் மீது போர் தொடுப்பதைத் தவிர தங்களுக்கு வேறு வழி இல்லை என ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ரஷ்யாவில் உள்ள தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த புதின், “ரஷ்யாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் மிக அதிகமாக இருப்பதால், வேறு வழிகளில் எதிர்வினையாற்ற இயலாது. உக்ரைன் மீதான படையெடுப்பு காலத்தின் கட்டாய நடவடிக்கை.

உலகப் பொருளாதாரத்தின் ஒரு பகுதியாக இருக்கவேண்டும் என்பதே ரஷ்யாவின் விருப்பம். இப்போதும் கூட சர்வதேச பொருளாதாரத்தின் ரஷ்யா உள்ளது.

எனவே, உலகப் பொருளாதாரத்தை நாங்கள் சேதப்படுத்தப் போவதில்லை. அது எங்கள் திட்டமும் இல்லை. சர்வதேச பொருளாதாரத்தில் இருந்து விலகும் திட்டம் எதுவும் எங்களிடம் இல்லை.

இதை உலகின் மற்ற நாடுகள் புரிந்துகொள்ள வேண்டும். மேலும் இந்த உக்ரைன் மீதான எங்கள் நடவடிக்கைகளைத் தடுக்க உலக நாடுகள் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கக்கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “புதினுடன் பிரதமர் மோடி பேசுவார்” : உக்ரைன் விவகாரம் குறித்து முக்கிய தகவலை வெளியிட்ட வெளியுறவு செயலர்!