உலகம்

உக்ரைனில் உக்கிரமடையும் போர்: 2 லட்சம் படைகளை இறக்கிய ரஷ்யா; பீதியில் உலக நாடுகள்!

உக்ரைனின் கிழக்கு பகுதியில் உள்ள பகுதிகளை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கிளர்ச்சியாளர்களுக்கு ரஷ்யா ஆதரவு அளித்து வருகிறது.

கிழக்கு உக்ரைனில் கிளா்ச்சியாளா்களின் கட்டுப்பாட்டில் உள்ள இரு பிராந்தியங்களை சுதந்திரமான பகுதிகள் என்று ரஷ்யா அங்கீகாரம் வழங்கியது இரு தரப்பிலும் மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

இந்நிலையில், சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்ட டோன்பாஸ் பகுதிக்குள் சிறப்பு ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள ரஷ்ய ராணுவத்திற்கு அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார்.

கிளர்ச்சியாளர்களின் வேண்டுகோளை ஏற்று டோன்பாஸ் நகரில் சிறப்பு ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் ரஷ்யா அறிவித்துள்ளது. இதற்கிடையே உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யப் படைகள் தாக்குதலை தொடங்கி உள்ளது. மேலும் 10க்கும் மேற்பட்ட உக்ரைனின் நகரங்கள் மீது ரஷ்யா குண்டு மழையை பொழிந்து வருகிறது.

இதனால், அப்பகுதியில் உச்சகட்ட போர்ப்பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதுவரை 2 லட்சம் ரஷ்ய படைகள் உக்ரைனை சுற்றி தயார் நிலையில் உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, உக்ரைன் விவகாரம் மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளதாக ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரோஸ் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்தில் பேசிய அன்டோனியோ குட்டரோஸ்,போரை தவிர்த்து, அமைதி வழியில் பிரச்சனைகளுக்கு தீர்வு காண ரஷ்யா முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Also Read: #LIVE |உக்ரைனில் குண்டு மழை பொழியும் ரஷ்யா; கடும் வீழ்ச்சியை நோக்கி செல்லும் உலகப் பொருளாதாரம்!