உலகம்

முடிவுக்கு வருகிறதா ஃபேஸ்புக் காலம்? : ஒரே நேரத்தில் வெளியேறிய கோடிக்கணக்கான பயனாளர்கள் - சரிந்த மதிப்பு!

சமூக வலைதளமான ஃபேஸ்புக் பெரும்பாலானோரின் வாழ்விலும் நீங்க முடியாத இடத்தைப் பிடித்துவிட்டது. இந்நிலையில் ஃபேஸ்புக்கிற்கு வரும் தினசரி பயனர்களின் வருகை முதல்முறையாக குறையத் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு முந்தைய காலாண்டில் ஃபேஸ்புக்கின் தினசரி பயனர்களின் வருகை நாளொன்றுக்கு 1.930 பில்லியனாக இருந்த நிலையில், தற்போதைய காலாண்டில் அது 1.929 பில்லியனாக சரிந்துள்ளது.

ஃபேஸ்புக் செயலியானது மெட்டா பிளாட்பார்ம்ஸ் என்ற நிறுவனம் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. ஆப்பிள் ஃபோன்களில் பிரைவேசி விதிகளில் மாற்றம் செய்யப்பட்டதன் காரணமாகவும், டிக்டாக் உள்ளிட்ட போட்டி நிறுவனங்களின் பயனாளர்கள் அதிகரித்ததன் காரணமாகவும் தினசரி பயனாளர் வருகை குறைந்துள்ளதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஃபேஸ்புக் நிறுவனம் தொடங்கப்பட்டு 18 ஆண்டுகள் ஆகின்றன. இதுவரையிலும் இந்த நிறுவனம் சரிவுப்பாதையில் சென்றதே கிடையாது என்ற நிலையில், முதல்முறையாக அந்நிறுவனத்தின் பங்குகள் 20 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்துள்ளன.

ஃபேஸ்புக்கின் மெட்டா நிறுவனத்தின் பங்குகள் சர்வதேச சந்தையில் வீழ்ச்சி அடைந்ததைத் தொடர்ந்து மார்க் ஸக்கர்பெர்க்கிற்கு ஒரே நாளில் 2,900 கோடி டாலர் ரூ.2.16 லட்சம் கோடி) இழப்பு ஏற்பட்டுள்ளது.

மார்க்கிற்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பால், அவரது சொத்து மதிப்பு இந்தியாவின் முகேஷ் அம்பானி, கவுதம் அதானியின் சொத்து மதிப்புக்கும் கீழே சரிந்துவிட்டதாக ஃபோர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இதுதொடர்பாக ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க், “நமது குழு மிகச் சிறப்பாகச் செயல்படுகிறது. தயாரிப்புகள் மிக விரைவாக வளர்ந்து வருகிறது. டிக்டாக் ஏற்கெனவே ஒரு பெரிய போட்டியாளராக உருவாகியுள்ளது, தொடர்ந்து வேகமாகவும் வளர்ந்து வருகிறது. மெட்டா முன்னேறுவதற்கு இது தடையாக இருந்தாலும், இந்த மைல் கல்லைத் தொடுவதற்கு ஒரு ஆரம்பமே” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: Facebook பார்த்தால் ‘பளார்’... அறைவதற்கு ஆள் வைத்து சம்பளம் கொடுத்த CEO... இது என்ன கதை தெரியுமா?