உலகம்

தாலிபான்கள் உத்தரவால் பெண்கள் கடும் அதிர்ச்சி... ஆப்கானிஸ்தானில் நடப்பது என்ன?

குடும்பத்தைச் சேர்ந்த ஆண்களின் துணை இல்லாமல் பெண்கள் தொலைதூரத்திற்கு பயணம் செய்ய தாலிபான் அரசு தடை விதித்துள்ளது.

ஆப்கானிஸ்தானை சில மாதங்களுக்கு முன் தாலிபான்கள் கைப்பற்றினர். ஆப்கன் மீண்டும் தாலிபான்கள் வசம் சென்றுள்ளதால் அந்நாட்டில் வசிக்கும் பெண்கள் அச்சமடைந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் ஆட்சியைப் பிடித்த பிறகு பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டு வருகின்றனர். பள்ளிகளில் மேல்நிலைப் படிப்புகளில் பெண்களுக்கு அனுமதி அளிக்கப்படாது என தாலிபான்கள் அறிவித்தது உலகம் முழுவதும் பெண்ணிய செயற்பாட்டாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள புதிய உத்தரவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி 72 கி.மீ துாரத்துக்கு மேற்பட்ட பயணத்தின்போது ஆண்கள் துணையில்லாமல் பெண்கள் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதுவும் அந்த ஆண், நெருங்கிய உறவினராக இருக்க வேண்டும். முழு உடலையும் மறைக்கும் ஆடைகளை அணிந்தால் மட்டுமே பெண்கள் பயணம் செய்ய முடியும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

முன்னதாக, ஆப்கானிஸ்தான் தேர்தல் ஆணையத்தைக் கலைப்பதாக சமீபத்தில் தாலிபான்கள் அறிவித்துள்ளனர். தற்போதைய நிலையில் இந்த அமைப்புகளுக்கு எந்த தேவையும் இல்லை என தாலிபான்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு ஆப்கானிஸ்தானை பின்னோக்கி இழுத்துச் செல்லும் நடவடிக்கைகளை தாலிபான்கள் மேற்கொண்டு வருவதற்கு பெண்ணிய செயற்பாட்டாளர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Also Read: “கடந்த 20 வருசத்துல நீங்க படிச்ச எதுவுமே செல்லாது” : தாலிபான்கள் அறிவிப்பால் அதிர்ச்சியில் ஆப்கன் மக்கள்!