உலகம்

“கொரோனாவே பரவாயில்லைனு நினைக்கிற அளவுக்கு கொடிய தொற்றுகள் இனிமேல் வரும்” : அதிர்ச்சி கிளப்பும் விஞ்ஞானி!

தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றைவிட வருங்காலத்தில் ஏற்படும் பெருந்தொற்றுகள் மிகக் கொடியதாக இருக்கலாம் என ஆக்ஸ்ஃபோர்டு - ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசியை உருவாக்கியவர்களில் ஒருவரான பேராசிரியர் டேம் சாரா கில்பெர்ட் எச்சரித்துள்ளார்.

கொரோனா தொற்று உலகையே பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ள நிலையில், அதன் பல்வேறு திரிபுகள் அடுத்தடுத்து பரவி நிலைகுலையச் செய்துள்ளன.

இந்நிலையில், ஆக்ஸ்ஃபோர்டு - ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசியை உருவாக்கியவர்களில் ஒருவரான பேராசிரியர் டேம் சாரா கில்பெர்ட், பெருந்தொற்றுகள் குறித்து எச்சரித்துள்ளார்.

உலகப் புகழ்பெற்ற ரிச்சர்ட் டிம்பிள்பி உரையில் பேசிய பேராசிரியர் டேம் சாரா கில்பெர்ட், “ஒரு வைரஸ் நம் உயிரையும் வாழ்வாதாரத்தையும் அச்சுறுத்துவது இது கடைசியாக இருக்காது.

உண்மை என்னவென்றால், அடுத்து வருவது இன்னும் மோசமானதாக இருக்கக்கூடும். அது அதிகம் பரவக்கூடியதாகவோ அல்லது கொடியதாகவோ அல்லது இரண்டுமாகவோ இருக்கக்கூடும்.

நாம் அடைந்திருக்கும் பொருளாதார இழப்புகள், தொற்றைத் தடுப்பதற்கான நிதி இல்லை என்பதை உணர்த்துகிறது. பெருந்தொற்றால் ஏற்படும் இழப்புகளைத் தடுக்க, அதிக நிதி தேவைப்படும்." எனத் தெரிவித்தார்.

ஒமைக்ரான் கொரோனா திரிபுக்கு எதிராக தடுப்பூசிகள் குறைந்த செயல்திறன் கொண்டதாகவே இருக்கும். அதுவரை கவனத்துடன் இருப்பதோடு புதிய கிருமிப்பரவலின் வீரியத்தைக் குறைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

Also Read: "கொரோனா யாரையும் விட்டுவைக்காது".. மனைவி, மகள்களை கொலை செய்த மருத்துவர்: உ.பி-யில் அதிர்ச்சி சம்பவம்!