உலகம்

‘மனைவி கொடுமை தாங்க முடியல... ஜெயிலுக்கே போறேன்” : போலிஸாரிடம் கெஞ்சி சிறைக்குச் சென்ற இத்தாலி நபர்!

குற்றம் செய்தால் சிறைக்குச் செல்லாமல் எப்படித் தப்பிப்பது என நினைப்பவர்களுக்கு மத்தியில் மனைவியின் கொடுமை தாங்காமல் தன்னை சிறையில் அடைத்துவிடுங்கள் என ஒருவர் போலிஸாரிடம் மன்றாடிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இத்தாலியின் ரோம் நகரத்தை ஒட்டி கைடோனியா மாண்டெசெலியோ என்ற பகுதி உள்ளது. இங்கு வசித்து வரும் அல்பேனிய வம்சாவளியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் போதைப் பொருள் பயன்படுத்தியுள்ளார். இந்தக் குற்றத்திற்காக அவரை போலிஸார் வீட்டுச் சிறையில் அடைத்துள்ளனர்.

இதனால், அவர் பல மாதங்களாக வீட்டுச் சிறையில் இருந்து வருகிறார். இவரின் தண்டனைக் காலம் முடிவடைய இன்னும் சில ஆண்டுகள் இருக்கும் நிலையில் அந்த இளைஞர் வீட்டிலிருந்து தப்பித்து காவல்நிலையம் வந்துள்ளார்.

அப்போது, போலிஸாரிடம் இனிமேல் என்னால் வீட்டில் இருக்க முடியாது எனக் கூறியுள்ளார். ஏன் என போலிஸார் கேட்டுள்ளனர். அப்போது அந்த இளைஞர், வீட்டில் என்னுடைய மனைவியின் கொடுமையை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. வீடு நரகம் போலாகிவிட்டது. தயவுசெய்து என்னைச் சிறையில் அடைத்துவிடுங்கள் எனக் கூறியுள்ளார்.

இதையடுத்து வீட்டுச் சிறையிலிருந்து வெளியே வந்த குற்றத்திற்காக அவரை போலிஸார் நீதிமன்றத்தில் அஜர்படுத்தி, அவரது கோரிக்கையை ஏற்று போலிஸார் சிறையில் அடைத்தனர்.

Also Read: கொரோனா பரவலால் மீண்டும் சீனாவில் ஊரடங்கு... வீட்டுத்தனிமையில் 23 ஆயிரம் பேர் : உலக நாடுகள் பீதி!