உலகம்

ஃபேஸ்புக், வாட்ஸ்அப் முடங்கியதால் டெலிகிராமுக்கு அடித்த ஜாக்பாட் : ஒரே நாளில் 7 கோடி புதிய பயனாளர்கள்!

உலகின் முன்னணி சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக், வாட்ஸ்-அப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய மூன்று தளங்களும் நேற்று முன்தினம் இரவு இந்திய நேரப்படி 9 மணியிலிருந்து முடங்கின.

இந்த மூன்று தளங்களும் ஒரே நேரத்தில் முடங்கியதால் இதன் பயனாளர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். உலகம் முழுவதும் இந்தப் பிரச்சனை ஏற்பட்டதால் இந்த நிறுவனம் இந்தக் கோளாறை உடனே சரிசெய்ய முயற்சி மேற்கொண்டது.

கிட்டத்தட்ட 6 மணி நேரத்திற்குப் பிறகு ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப் இன்ஸ்டாகிராம் செயலிகள் மீண்டும் பழையபடி செயல்பாட்டிற்கு வந்தன. இதையடுத்து இதன் பயனாளர்கள் நிம்மதிப் பெருமூச்சுவிட்டனர்.

ஆனால், ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைவர் மார்க் ஸக்கர்பர்க்கின் சொத்து மதிப்புதான் ரூபாய் 52 ஆயிரம் கோடி குறைந்தது. இதனால் உலக பணக்காரர்கள் பட்டியலில் 5வது இடத்திற்கு அவர் தள்ளப்பட்டுள்ளார்.

இதனிடையே ஃபேஸ்புக் செயலி முடங்கிய அந்த 6 மணி நேர இடைவெளியில் புதிதாக 7 கோடி பயனாளர்கள் டெலிகிராமில் சேர்ந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ் கூறுகையில், "இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நேரத்தில் அதிகமான புதிய பயனாளிகள் அந்த நேரத்தில் எங்களிடம் சேர்ந்தனர். அதுமட்டுமன்றி பழைய பயனாளர்களும் இந்த நேரத்தில் மிக அதிக நேரம் எங்கள் செயலியைப் பயன்படுத்தினர்.

திடீரென நடந்த இந்த அதீத அதிகரிப்பை, எங்கள் ஊழியர்கள் மிகச்சிறப்பாகக் கையாண்டனர். இந்த விஷயத்தில் எங்கள் ஊழியர்களை நினைத்து எனக்குப் பெருமையாக உள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: ஃபேஸ்புக், வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம் சேவைகள் திடீர் முடக்கம்.. கோடிக்கணக்கானோர் அவதி.. என்ன நடந்தது?