உலகம்
லஞ்சப் பணத்தில் ‘தங்க பங்களா’ கட்டிய போலிஸ் அதிகாரி... கதவு முதல் கழிவறை வரை மின்னும் தங்கம்!
ரஷ்யாவின் ஸ்ட்ராவ்போல் மாகாணத்தைச் சேர்ந்தவர் அலெக்சாய் சஃபோனோவ். போக்குவரத்து போலிஸ் அதிகாரியான இவர் தனக்குக் கீழே பணிபுரியும் 35 அதிகாரிகளுடன் சேர்ந்து ஒரு மாஃபியா கும்பலை வழிநடத்தி லஞ்சம் வாங்கியதாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
பின்னர் இதுகுறித்தான விசாரணையில் அலெக்சாய் லஞ்சம் வாங்கியது உறுதி செய்யப்பட்டது. மேலும் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் லஞ்சமாக சுமார் 1.92 கோடி ரூபாய் வரை பெற்றுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அலெக்சாயுடன் சேர்த்து ஆறு அதிகாரிகளை போலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், அவரது வீட்டை போலிஸார் சோதனையிட்டனர். அவரது வீட்டிற்குச் சென்ற போலிஸார் வீடு முழுவதும் தங்கத்தால் மின்னுவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். அலெக்சாயியின் வீட்டின் கதவு முதல் கழிவறை வரை அனைத்து இடத்திலும் தங்கமுலாம் பூசப்பட்டுள்ளது.
அலெக்சாயியின் வீட்டின் விளக்குகள், கதவுகள், படிக்கட்டுகள், நாற்காலி, மேஜைகள், மரச்சாமான்கள், கழிவறைகள் என அனைத்து பொருட்களிலும் தங்கமுலாம் பூசப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் தனக்குக் கிடைத்த லஞ்சப் பணத்தில் செய்துள்ளதாக தி மாஸ்கோ டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விசாரணை நடத்திய போலிஸார் அந்த வீட்டில் எடுத்த புகைப்படங்கள், வீடியோக்களை யூடியூபில் வெளியிட்டுள்ளனர். கடந்த 20ஆம் தேதி பதிவேற்றப்பட்ட அந்த வீடியோவை இதுவரை பல லட்சம் பேர் பார்த்து ஆச்சரியப்பட்டுள்ளனர்.
அலெக்சாய் சஃபோனோவ் மீதுள்ள குற்றச்சாட்டு உறுதியானால் அவருக்கு 8 முதல் 15 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கும் என்றும் தி மாஸ்கோ டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
“நீதித்துறையின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்து வருகிறது” -முன்னாள் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் வருத்தம்!
-
5வது மாடியில் இருந்து வீசப்பட்ட பேச்சிளம் குழந்தை... தாயை அதிரடியாக கைது செய்த போலீஸ் -விசாரணையில் பகீர்!
-
காணாமல் போன மோடி : காணவில்லை என சுவரொட்டி அடித்த மணிப்பூர் மக்கள்!
-
பிரசாரத்துக்கு சென்ற பாஜக வேட்பாளருக்கு எதிர்ப்பு: சம்பவ இடத்திலேயே விவசாயி பரிதாப பலி -குவியும் கண்டனம்!
-
“பெண்கள் என்றால் எதை வேண்டுமானாலும் பேசலாமா ?” - சவுக்கு மீடியா சங்கருக்கு மகளிர் காங்கிரஸ் கண்டனம் !