உலகம்

“ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசியால் நரம்பியல் பிரச்சனை.. 2 பேர் பலி” : விழித்துக்கொள்ளுமா ஒன்றிய அரசு!?

அமெரிக்காவைச் சேர்ந்த ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் மருந்து மற்றும் குழந்தைகளுக்கான நுகர்வுப் பொருட்கள் தயாரிப்பில் முன்னணியில் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன.

குறிப்பாக கடந்தாண்டு அமெரிக்காவைச் சேர்ந்த நிக்கோலஸ் முர்ரோ என்பவர் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் தயாரிப்பு பொருளால் தனக்கு மார்பகம் வளர்ந்துவிட்டதாக கூறி, அந்நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். அதன் பேரில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்துக்கு அமெரிக்க நீதிமன்றம் ரூ.56,000 கோடி ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.

இதனையடுத்து ஜான்சன் அண்ட் ஜான்சன் பேபி பவுடரால் குழந்தைகளுக்கு புற்றுநோய் ஏற்பட்டதாக அமெரிக்காவில் 4 பேர் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், குழந்தைகளுக்கான பவுடரில் புற்றுநோய் ஏற்படுத்தக் கூடிய அஸ்பெஸ்டாஸ் கலந்திருப்பதாக 16,000-க்கும் அதிகமான புகாா் மனுக்கள் அந்த நிறுவனத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த வழக்கை, மத்திய அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநிலத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது. மேலும் இந்த வழக்கு விசாரணையில், ஜான்சன் அண்ட் ஜான்சன் பேபி பவுடரில் ஆஸ்பெஸ்டாசின் அம்சங்கள் இருப்பதால் அது புற்றுநோயை உண்டாக்கும் அபாயம் உள்ளது என்றும், வாடிக்கையாளர்களிடம் இது தொடர்பாக எந்தவித அறிவிப்பையும் செய்யவில்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம், அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் குழந்தைகளுக்கான டால்கம் பவுடர் விற்பனையை நிறுத்துவதாக தெரிவித்தது. இந்நிலையில் ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசியால் நரம்பியல் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் கொரோனா தடுப்பூசியை தயாரித்துள்ளது. இந்த தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அனுமதி அளித்துள்ளன. ஒரு டோஸ் மட்டுமே போடக்கூடிய வகையிலான தடுப்பூசி இதுவாகும். முன்னதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி தயாரிப்பதற்கு அனுமதி அளிக்கக்கூடாது எனவும் சமூக வலைதளங்களில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

ஆனாலும், பல்வேறு நாடுகள் அனுமதி அளித்ததன் விளைவாக அமெரிக்காவில் மட்டும் ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி செலுத்திக்கொண்ட 1.25 கோடி பேரில் 100 பேருக்கு Guillain Barre Syndrome என்ற நரம்பியல் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இதில், 95 பேர் தீவிரமாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அவசர சிகிச்சையில் இருப்பதாகவும், இருவர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த தடுப்பூசி லேபிளில் increased risk என்று குறிப்பிட்டுள்ளது. இந்த தடுப்பூசியை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இத்தகைய பாதிப்புகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. எனவே ஒன்றிய அரசு ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கக்கூடாது என வலியுறுத்தி வருகின்றனர்.

Also Read: நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்த சென்னை ஐகோர்ட் - என்ன காரணம் தெரியுமா?